கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த 55 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு! விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!



கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த 55 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை பிடித்து சென்றது. அவர்களை உடனே மீட்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு மந்திரியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக மீனவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிப்பது சென்று விடுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக மீனவர்கள் மீது தாக்குதல், விரட்டியடிப்பு, வலைகளை அறுத்து வீசுவது போன்றவற்றில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிப்பதை கைவிட்டிருந்தனர்.

இந்தநிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 537 படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் இரவு நடுக்கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் ரோந்து வந்தனர்.

அந்த பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் படகுகளை பார்த்ததும் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர். மேலும் இங்கு மீன்பிடிக்கக்கூடாது என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

இதைதொடர்ந்து மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்டனர்.

அப்போது கச்சத்தீவு அருகே நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். 43 மீனவர்களையும், விசைப்படகுகளையும் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவத்தை பார்த்த மற்ற மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இன்று (நேற்று) காலை ராமேசுவரம் கரை திரும்பியதும் இதுபற்றி தெரிவித்தனர். இதனால் மீனவ கிராமங்களில் பதற்றமான நிலை உருவானது.

மேலும் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து நேற்று 40-க்கும் மேற்பட்ட படகுகளில் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் தென்கடல் பகுதியான மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். இந்த மீனவர்கள் தனுஷ்கோடி அருகே உள்ள நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது 3 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 2 விசைப்படகு மற்றும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து மன்னார் கடற்படை முகாம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகுகள்

ஏற்கனவே ராமேசுவரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 6 விசைப்படகு 43 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறியதாவது:-
ராமேசுவரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் அடிக்கடி விரட்டி அடிப்பது, பிடித்து செல்வது தொடர்கதையாக உள்ளது. நேற்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றது கண்டனத்துக்குரியது. உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல். மத்திய அரசு முழுமையாக மீனவர்கள் மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கரிடம் தொலைபேசியில் பேசி உடனடியாக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேசுவரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதற்கு இலங்கை அரசிடம் வலியுறுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்து உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதற்கிடையே மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த 24 மணி நேரத்தில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட 2 சம்பவங்கள் நடைபெற்றுள்ளதை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தைச் சேர்ந்த 43 மீனவர்கள் 6 விசைப்படகுகளில் பாக் ஜலசந்தி பகுதியில் 18-ந்தேதி (நேற்று முன்தினம்) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து அவர்களை கைது செய்துள்ளனர்.

அதேபோல 19-ந்தேதி (நேற்று) நடந்த இன்னொரு சம்பவத்தில் கல்பாத்தி அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மண்டபம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்தப் போக்கை குறிப்பிட்டு தமிழக அரசு சார்பில் பல்வேறு கடிதங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக இந்த ஆண்டில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் 19 தடவை அரங்கேறி இருக்கின்றன. இந்த சம்பவங்களில் மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட சாதனங்களை இலங்கை கடற்படையினர் தர மறுக்கிறார்கள். இந்த ஆண்டில் நடந்த மீனவர் தாக்குதல் சம்பவங்களில் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களில் 5 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக நடத்திவரும் இந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது, பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளுக்கு எதிரானது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர நிச்சயம் அனுமதிக்க கூடாது. எனவே தமிழக மீனவர்கள் விவகாரத்தில் தேவையான உடனடி நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை உங்கள் கவனத்துக்கு கொண்டு வரும் அதேவேளை இலங்கை கடற்படையினருடன் உடனடியாக பேசி கைதான 55 தமிழக மீனவர்களை விடுவிக்க செய்வதுடன், இலங்கை கடற்படை வசம் உள்ள 73 விசைப் படகுகளையும் உடனடியாக மீட்டு கொண்டுவர தேவையான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments