வாட்ஸ்அப் பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பாக மாட்டார்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு






வாட்ஸ் அப்பில் உள்ளவர்கள் தவறான கருத்துக்களை பதிவு செய்தால், அதற்கு வாட்ஸ் அப் குரூப் அட்மின் பொறுப்பாக முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

வாட்ஸ் அப் குரூப் அட்மின் மீது போலீசார் வழக்கு
வழக்கை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு
வாட்ஸ் அப் குழு உறுப்பினர்கள் செய்யும் தவறுக்கு குரூப் அட்மின் பொறுப்பாக மாட்டார் என கருத்து

கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கரூர் வழக்கறிஞர்கள் என்ற பெயரிலான வாட்ஸ் ஆப் குரூப் துவக்கி அட்மினாக உள்ளேன்.

இந்த குரூப்பிலுள்ள ஒருவர் இரு சமூகங்களுக்கு இடையே பிரச்னைக்குரிய வகையில் செய்தியை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட நபரை எனது வாட்ஸ் அப் குரூப்பில் இருந்து நீக்கிவிட்டேன். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்' என்று தமது மனுவில் ராஜேந்திரன் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'வாட்ஸ் அப் குழு உறுப்பினர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பணி அட்மினை சேர்ந்தது. ஆனால், பதிவுகளை முறைபடுத்தவோ, மாற்றியமைக்கவோ, தணிக்கை செய்யவோ அவர்களால் முடியாது.

உறுப்பினர்களின் பதிவு சட்டத்திற்கு உட்பட்டவையே. உறுப்பினரின் பதிவிற்கு அட்மின் பொறுப்பாக முடியாது என ஒரு வழக்கில் மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மனுதாரர் அந்த குரூப்பின் அட்மின் மட்டுமே என்பது உறுதியானால், வழக்கின் இறுதி அறிக்கையில் அவரது பெயரை நீக்க வேண்டும். மாறாக அவர் மீதான வழக்கை நிரூபிக்க போதுமான ஆவணங்கள் கிடைத்தால் மனுதாரரை வழக்கில் சேர்க்கலாம். மனுதாரர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments