உங்கள் பொங்கல் பரிசுப் பையில் 21 பொருட்கள் இல்லையா..? இந்த நம்பருக்கு உடனே புகாரை தட்டிவிடுங்க.!




ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள் தரமானதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது."

பொங்கல் பரிசுத் தொகுப்பில் பொருள்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அதற்கான எண்ணை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் சுமார் இரண்டே கால் கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.1297 கோடி செலவில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்பு பையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, நெய், கோதுமை மாவு, ரவா, உப்பு, மிளகாய்த் தூள், மிளகு, கரும்பு உள்பட 21 பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசு பையில் 21 பொருட்கள் இல்லை என்று சில இடங்களில் புகார்கள் எழுந்தன. சமூக ஊடகங்களிலும் இது தொடர்பான பதிவை சிலர் வெளியிட்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் இதுதொடர்பாக விமர்சனம் செய்தார்.
 
இந்நிலையில் தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுதொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சக்கரபாணி, “பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் முறையாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பை பெரும் பொதுமக்கள் 21 பொருட்களும் இருக்கிறதா என்பதை சரிபார்த்து வாங்க வேண்டும். பொருட்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் 18005993540 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் செய்யலாம். துறை சார்ந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” என்று சக்கரபாணி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “கூட்டுறவு சங்கத்தில் உள்ள அனைவரும் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான். அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்குக் கொடுக்கப்படும் பொங்கல் பரிசுப் பொருள் தரமானதாக இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு தரமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் உண்மைக்குப் புறம்பான திட்டங்களை தெரிவித்து அது அனைத்தும் நிறைவேற்றப்படாமல்தான் இருந்தது. ஆனால், தற்போதைய ஆட்சியில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமன்றி சொல்லாத வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments