வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருவோருக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வது கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு






பிற நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்ய வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் புதிய நடைமுறைகள் வரும் ஜனவரி 11ஆம் தேதியில் இருந்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பயணம் தொடங்குவதற்கு முன்னதாக சுய உறுதி விவரங்களை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கடந்த 14 நாட்களில் மேற்கொண்ட அனைத்து பயண விவரங்களையும் குறிப்பிட வேண்டும். 72 மணி நேரத்திற்கு முன்பாக கொரோனா RT-PCR பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதிக ஆபத்து நிறைந்த பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

அவர்களுக்கு பயணம் முடிந்த பின்னர் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். ஏர் சுவிதா இணையதளத்தில் அனைத்து விவரங்களையும் பதிவேற்றம் செய்த பயணிகளை மட்டுமே விமான நிறுவனங்கள் பயணிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். அனைத்து பயணிகளும் தங்களுடைய மொபைலில் ஆரோக்ய சேது ஆப் வைத்திருப்பது அவசியம்.

பயணத்தின் போது அறிகுறிகள் தென்பட்டால் உரிய முறையில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். விமானப் பயணம் நிறைவடைந்த பின்னர், போதிய சரீர இடைவெளி விட்டு பயணிகள் வெளியே வர வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்த சுய உறுதி விவரங்கள் தொடர்பான ஆவணத்தை காண்பிக்க வேண்டும். விமான நிலையத்தில் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ மையத்திற்கு அழைத்து சென்று தனிமைப்படுத்த வேண்டும்.

அங்கு பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். ஆபத்து நிறைந்த பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வெளியே வருபவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. அதில், பயணம் முடிந்தவுடன் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.

அதன் முடிவுகள் வரும் வரை வெளியேறக் கூடாது. ஒருவேளை நெகடிவ் வந்தால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 8வது நாளில் மீண்டும் RT-PCR பரிசோதனை செய்யப்படும். அடுத்தடுத்து செய்யப்படும் பரிசோதனை முடிவுகளை ஏர் சுவிதா இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். 8வது நாள் பரிசோதனையின் முடிவுகள் நெகடிவ் என்று வந்தால் அடுத்த 7 நாட்கள் தங்களை சுய கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டும்.

அதேசமயம் முடிவுகள் பாசிடிவ் என வந்தால் அவர்களது மாதிரிகள் INSACOG ஆய்வக நெட்வொர்க்கில் ஜீனோமிக் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதேபோன்ற நடைமுறை மற்ற நாடுகளில் இருந்து இந்தியா திரும்புவோரும் பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments