ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்” - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி






கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு நேரடி தேர்வுகள் நடத்தப்படும் என தமிழக அரசு உறுதிபட தெரிவித்து இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இனி நடத்தப்படாது என்றும் நேரடி தேர்வு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை தெரிவித்திருந்தது. உயர்கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
பாடங்களை ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வு மட்டும் நேரடியாக நடத்துவது நியாயமாகாது என மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டங்களும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேரடி தேர்வு நடத்துவதில் உறுதியாக இருந்த உயர்கல்வித்துறை தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு ஆன்லைனில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ம் தேதி வரை ஆன்லைன் முறையில்  செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று  அமைச்சர் பொன்முடி தெரிவித்திருக்கிறார்.கல்லூரி இறுதியாண்டு தேர்வு நேரடியாக சுழற்சி முறையில் நடத்தப்படும். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன்முடி, அனைத்து அரசு, தனியார் கல்லூரி மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் மூலம் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.

மேலும் ஒவ்வொரு பல்கலைக்கழகத்தில் நடத்திய பாடங்களிலிருந்து கேள்வி கேட்கப்படும் என்றும் கிராமப்புற மாணவர்கள் அப்லோட் செய்த விடைத்தாள்கள் வந்து சேர்வது தாமதமானாலும் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

எனவே இந்த ஆண்டும் ஆன்லைனில் தான் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments