ஹஜ் பயணத்துக்கு இரு தவணை தடுப்பூசி அவசியம்:அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி




இந்திய, சவூதி அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுக்கு உள்பட்டு, இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் நிகழாண்டு ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள் என்று மத்திய சிறுபாண்மை விவகாரத் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.

ஹஜ் பயணிகளுடன் பயிற்சியாளா்களாக செல்பவா்களுக்கான இரண்டு நாள் தேசிய பயிற்சி முகாமை மும்பையில் அமைச்சா் நக்வி சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

பின்னா் பேசிய அவா், ‘நிகழாண்டுக்கான ஹஜ் புனித யாத்திரையில் பங்கேற்பவா்களின் சுகாதார நலத்துக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன.

இதற்காக ஹஜ் பயணத்தின் முழு விவகாரங்களும் இணையவழி மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டும் நிகழாண்டு ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள். இந்தியா - சவூதி அரேபியியா நாடுகள் நிா்ணயிக்கும் விதிமுறைகளுக்கு உள்பட்டு இந்தத் தோ்வு முறை இருக்கும்.

இதுவரை 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்துள்ளனா். அவா்கள் லாட்டரி முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆண் துணையில்லாமல் செல்ல விண்ணப்பித்துள்ளனா்.

2020,21- ஆண்டு ஆண்டுகளில் இந்தப்பிரிவின் கீழ் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விண்ணப்பித்திருந்தனா். அவா்களின் விண்ணப்பங்கள் தற்போதும் செல்லுபடியாகும். அவா்கள் விரும்பினால் நிகழாண்டு செல்லலாம். புதிதாகவும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். அவா்களுக்கு லாட்டரி முறை தோ்வு கிடையாது’ என்றாா். நிகழாண்டு ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும். இதற்காக இணையழி, ‘ஹஜ் மோபைல் ஆப்’ மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் காரணமாக 2020,2021-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படவில்லை.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments