ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் QR-ஐ ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு







ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் QR-ஐ ஸ்கேன் செய்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது

தமிழகத்தில் உள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளில், 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புதிதாக ரேஷன் அட்டைகள் விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இதை, வரும் 31 ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்ததால், ஜனவரி மாதம் 10 ஆம் தேதி முதல் அத்தியாவசியப் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ள வரும் ரேஷன் அட்டைதாரர்களின் கைரேகைப் பதிவு, இயந்திரங்களில் சரியாக பதிவாகவில்லை என்றும், இதன் காரணமாக, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதில் சிரமம் இருப்பதாகவும் செய்தி வெளியாகியது. எனினும் பழைய முறைப்படி பொருட்களை வினியோகம் செய்யவும் ரேஷன் கடைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டால் QR-ஐ ஸ்கேன் செய்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், குடும்ப அட்டை எண்ணை விற்பனை முனையத்தில் பதிவு செய்து ரேஷன் பொருட்களை வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் குடும்ப அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் இன்று வழக்கம் போல் ரேஷன் கடைகள் இயங்கும் என்றும், அதற்கு பதிலாக, பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments