இலங்கையில், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி முதன்முறையாக தமிழக மீனவர்களின் 128 படகுகள் ஏலம்




தமிழகத்தின் எதிர்ப்பை மீறி இலங்கையில் முதன்முறையாக தமிழக மீனவர்களின் 128 படகுகள் ஏலம் விடப்பட்டது. சிங்கள மீனவர்கள், வியாபாரிகள் இந்த படகுகளை ஏலம் எடுத்தனர்.

ஏலம் விடும் முடிவு

தமிழகத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் மீன்பிடி படகுகளை எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை பறிமுதல் செய்து, இலங்கையின் காரைநகர் மன்னார், காங்கேசன்துறை உள்ளிட்ட பல்வேறு கடற்படை முகாம்களில் நிறுத்தி வைத்திருந்தது.

இந்தநிலையில், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்படும் என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நாட்டு அரசு அறிவித்தது.

இலங்கை அரசின் இந்த முடிவு தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் மீனவர்கள் கண்டனமும் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இலங்கையை கண்டித்ததுடன், தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மீனவர்கள்-வியாபாரிகள்

இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரையிலும் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டன.

காரைநகர் முகாமில் இலங்கை கடற்படை, அந்நாட்டு மீன்வளத்துறை அதிகாரிகள் இணைந்து இந்த படகுகள் ஏலத்தை நடத்தினர். இதில் இலங்கையைச் சேர்ந்த தமிழக, சிங்கள மீனவர்களும், பழைய இரும்பு-பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு படகு இலங்கை மதிப்பில் ரூ.13 லட்சத்திற்கு ஏலம் போனது.

128 படகுகள் ஏலம்

இந்த நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி வரை காரைநகர் கடற்படை முகாமில் 128 படகுகள் ஏலம் விடப்பட்டன. இதன் மொத்த மதிப்பு இலங்கை பணத்தில் ரூ.52 லட்சத்து 20 ஆயிரத்து 500 ஆகும்.

இதே போல் காங்கேசன் கடற்படை முகாம், கிளிநொச்சி மாவட்டம், கிராந்தி கடற்படை முகாம், தலைமன்னார் கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள மீதமுள்ள படகுகள் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏலம் விடப்படுகின்றன. வருகிற 10-ந் தேதி வரை ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேதனை

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதுடன் சிறை பிடிக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படும் சம்பவங்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையிலும் இதுவரை தமிழக மீனவர்களின் படகுகள் ஏலம் விடப்பட்டது கிடையாது. ஆனால் முதல் முறையாக தற்போது தமிழகத்தின் எதிர்ப்பை மீறி தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விட்டுள்ளது, ஒட்டுமொத்த தமிழக மீனவர்களையும் வேதனை அடையச் செய்திருக்கிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments