புதுக்கோட்டையில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு பயிற்சி



சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வெளியிட புதுக்கோட்டை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா பெற்றுக்கொண்ட போது   

புதுக்கோட்டையில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

விழிப்புணர்வு பயிற்சி

புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் சார்பில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ‘சைபர் கிரைம்’ விழிப்புணர்வு பயிற்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் பேசும்போது கூறியதாவது:-

அறிமுகமில்லாத நபர்களிடம் இருந்து வரும் மின்னஞ்சல்களையோ அல்லது குறுஞ்செய்திகளையோ திறந்து பார்க்க வேண்டாம். அதில் உங்கள் தகவல்களை திருடும் வைரஸ் இருக்கலாம். உங்கள் ஏ.டி.எம். எண், ஆதார் எண்ணை பாதுகாப்பாக வைக்கவும். எவரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இணையத்திலோ செல்போனிலோ உங்களது சுயவிவரங்களை எவரேனும் கேட்டால் பகிர்ந்து கொள்ளக்கூடாது.

இணைய வழி மோசடி

எக்காரணத்தை கொண்டும் முன் பின் தெரியாத நபர்களிடம் உங்கள் வங்கியிலிருந்து அனுப்பப்படும் 4 இலக்க ஓ.டி.பி. எண்ணை கொடுத்து விடாதீர்கள். சைபர் குற்றங்களுக்கு 155260 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும். இணைய வழி மோசடிகளுக்கு http://cybercrime.gov.in-ல் புகார் அளிக்க வேண்டும்.

மேலும் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் 94981 60665, சப்-இன்ஸ்பெக்டரை 94981 90675, 98430 91178 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும் சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வினை தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

துண்டு பிரசுரம்

முன்னதாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு நடைமுறைகள் குறித்த துண்டுபிரசுரத்தை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி வெளியிட புதுக்கோட்டை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா பெற்றுக்கொண்டார்.

இதில், இலுப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் மணிமொழி, பள்ளி துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments