விசைப்படகு என்ஜினில் கோளாறு:கடலில் குதித்த கோட்டைப்பட்டினம் மீனவரின் கதி என்ன?தேடும் பணி தீவிரம்






விசைப்படகு என்ஜினில் கோளாறு காரணமாக கடலில் குதித்த கோட்டைப்பட்டினம் மீனவரின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விசைப்படகு

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஷாலினி என்பவருக்கு சொந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் ராஜா (வயது 42), அம்பலவாணன் மகன் சுந்தரபாலு (50), தர்மன் மகன் சந்தனகுமார் (43) ஆகிய 3 பேரும் டோக்கன் வாங்கிக்கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க நேற்று மாலை கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டனர்

மீனவர் கதி என்ன?

அப்போது, விசைப்படகில் உள்ள என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. உடனே அதனை சரிசெய்ய படகில் இருந்த சுந்தரபாலு என்பவர் கடலில் குதித்துள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் கடலில் இருந்து மேலே வரவில்லை. உடனே படகில் இருந்த மற்ற 2 பேரும் சுந்தர பாலுவை கடலில் குதித்து தேடியுள்ளனர். ஆனால் வெகு நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. உடனே அவர்கள் இருவரும் இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். 
பின்னர் மீனவர் சங்க நிர்வாகிகள் மீன் வளத்துறை மற்றும் கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் குழுமத்தினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாயமான மீனவரை தேடும் பணியில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments