ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு




நெய், தயிர் உள்ளிட்ட பால் பொருட்கள் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் திருத்தப்பட்டுள்ள விலைப் பட்டியலை அறிவித்துள்ளது. இது நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது.

தமிழக பால்வளத் துறையின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம், தமிழகம் முழுவதும் இருந்து நாளொன்றுக்கு 41 லட்சம் லிட்டர் பால் வரை கொள்முதல் செய்கிறது. இதில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மற்றும் 25 மாவட்ட ஒன்றியம் மூலமாக, சராசரியாக 28 லட்சம் லிட்டர் பாலை நாளொன்றுக்கு விற்பனை செய்கிறது. மீதமுள்ள பால், ஆவின் பால் பொருட்கள் செய்யபயன்படுத்துகிறது. அதன்படி, நெய், தயிர், பால் பவுடர் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்கிறது.

முதல்வராக மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 குறைப்பதாக அறிவித்தார். இந்த விலை குறைப்பு கடந்த மே 16-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.இந்நிலையில், நெய் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிய விலைமாற்றம் மார்ச் 4-ம் தேதி (நேற்று)முதல் நடைமுறைக்கு வருவதாகவும் ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, நெய், ஒரு லிட்டர் ரூ.515-ல் இருந்து ரூ.535 ஆகவும், அரை லிட்டர் ரூ.265-ல் இருந்து ரூ.275 ஆகவும், 200 மில்லி ரூ.115-ல்இருந்து 120 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 15 லிட்டர் டின் ரூ.8,350-ல் இருந்து ரூ.8,680 ஆகவும், அரை லிட்டர் தயிர் ரூ.27-ல் இருந்து ரூ.30 ஆகவும், 200 கிராம் பாதாம் பவுடர் ரூ.20 அதிகரித்து ரூ.100 ஆகவும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கோன் ஐஸ்கிரீம் வகைகள் (100 மில்லி) ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆவின் பால் பொருட்களின் இந்த விலை உயர்வுக்கு பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கேட்டபோது ஆவின் அதிகாரிகள் கூறியதாவது, ஆவின் பொருட்களின் விலை திடீரென உயர்த்தப்படவில்லை. சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக உயர்த்தப்படாமல் இருந்த பொருட்களுக்கு, அதிகபட்சமாக 3.8 சதவீதம் மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நெய் ஒரு லிட்டர் ரூ.695 வரை விற்கப்படுகிறது. ஆனால், ஆவின் நெய் லிட்டருக்கு ரூ.515 ஆகவே (தற்போது ரூ.535) இருந்தது.

இந்த இடைவெளியை பயன்படுத்தி, ஆவின் பொருட்களை குறைவான விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு சிலர் விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்கவும் இந்த விலை ஏற்றம் உதவும். அதேபோல, நறுமண பாலுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெட்டியில் அடைத்து விற்கப்படும் ஸ்ட்ராபெரி, வெண்ணிலா உள்ளிட்ட நறுமண பால் வகைகளின் விலையும் அதிகரிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments