விளையாட்டு விடுதிகளில் மாணவ- மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு பள்ளிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டு பள்ளிகள் பின்வரும் இடங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி:- மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவியருக்கான விளையாட்டு விடுதி:- ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாவட்ட அளவிலான தேர்வு

இந்த விளையாட்டு விடுதிகளில் உள்ள பின்வரும் விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தேர்வு வரும் 23-ந் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கு விளையாட்டு விடுதியில் சேர்வதற்கு புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இம்மாதம் 23-ந் தேதி மாணவ-மாணவிகளுக்கு கீழ்க்காணும் விளையாட்டுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது.

மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ் மற்றும் வில்வித்தை ஆகும்.

மாணவிகளுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, பளுதூக்குதல், கபடி, டென்னிஸ், ஜூடோ மற்றும் ஸ்குவாஷ் ஆகும்.

22-ந் தேதி கடைசி நாள்

மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவ-மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான படிவத்தினை பூர்த்தி செய்து வருகிற 22-ந் தேதி அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments