பட்டுக்கோட்டை: அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து உயிரிழந்த 7 வயது சிறுவன்





   பட்டுக்கோட்டை அருகே ஆத்திக்கோட்டை கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கி இரண்டாம் வகுப்பு பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள ஆத்திக்கோட்டை மேற்கு பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், இவர் கூலி தொழிலாளி. இவரது மகன் சபரி (வயது 7) இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் வீட்டை விட்டு வெளியில் சென்ற சபரி நீண்ட நேரமாக வீடு திரும்பவில்லை, இதனால் வீட்டிலுள்ளவர்கள் அக்கம் பக்கம் முழுதும் தேடி பார்த்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் 1 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள பகுதியில் மின் கம்பி அறுந்து விழுந்த நிலையில் மின்சாரம் தாக்கி சிறுவன் சபரி இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதுபற்றி பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் தமிழ்ச்செல்வன் புகார் தெரிவித்தார். இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

மேலும் காவல்துறையினர்  இந்த சிறுவன் இறந்தது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி பள்ளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments