மீன்பிடி தடைக்காலம் எதிரொலியால் கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்களின் விலை கணிசமாக உயர்ந்தது.





தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.

மீன்கள் விலை உயர்வு

குறிப்பாக நண்டு வலை, முரல் வலை, செங்கனி வலை, கணவாய் போன்ற வலைகளை பயன்படுத்தி மட்டும் மீன் பிடிக்க முடியும். மடி வலை, இழுவை வலை போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் மற்றும் இறால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

700 கிராம் எடை கொண்ட ஒரு சிலுவை கெண்டை மீன் ரூ.150 முதல் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கூறு கொடுவா மீன் ரூ.250 முதல் ரூ.450-க்கும், புள்ள முரல் மீன் ரூ.15 முதல் ரூ.25-க்கும், வெங்கனா பொடி மீன் ஒரு கூறு ரூ.100 முதல் ரூ.200-க்கும் இறால் ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600-க்கும் விற்பனையானது.

கருவாடு

இதேபோல் மற்ற வகை மீன்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் குளத்து மீன்களும், வளர்ப்பு இறால்களும் விற்பனைக்கு வருகிறது. ஆனால் கருவாடு விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சில நாட்களில் கருவாடு விலையும் அதிகரிக்கும் என்றும், தடைக்காலம் முடிந்த பிறகே மீன்களின் விலை குறையும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். மீன் விலை உயர்ந்ததால் கட்டுமாவடி மீன் மார்க்கெட் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments