குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்; சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்





குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.

குற்றால சீசன்

தென்னகத்தின் ‘ஸ்பா' என்று அழைக்கப்படும் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குளுமையான சீசன் நிலவும். பெரும்பாலும் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். குளிர்ந்த காற்று வீசும். அவ்வப்போது இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டும்.

இந்த குளுகுளு சீசனை அனுபவித்து, அருவிகளில் குளித்து மகிழ்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
வழக்கமாக தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது, ஜூன் மாதத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கும். சில ஆண்டுகளில் மே மாத இறுதியில் குற்றால சீசன் தொடங்கும்.

அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குற்றாலம், தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்று வேகமாக வீசியது. நேற்று முன்தினம் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் சாரல் மழை பெய்ததால், குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. மெயின் அருவியில் தண்ணீர் பரந்து விழுந்தது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. பழைய குற்றாலம் அருவியில் மட்டும் தண்ணீர் விழவில்லை.

சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

குற்றாலத்தில் நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. இடையிடையே வெயிலும் அடித்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்ததை கேள்விப்பட்ட உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். விடுமுறை நாளான நேற்று ஏராளமானவர்கள் குற்றாலம் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதேநிலை நீடித்தால் குற்றாலத்தில் விரைவில் சீசன் தொடங்கி களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments