புதுக்கோட்டையில் நாளை நடக்க உள்ள குரூப்-2 தேர்வுக்கு 11 பறக்கும் படைகள் அமைப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் குரூப்-2 (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-2 மற்றும் தொகுதி 2 ஏ ) பதவிகளுக்கான முதல் நிலை தேர்வு நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இத்தேர்வை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-2 தேர்வு 58 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 82 தேர்வு மையங்களில் 22 ஆயிரத்து 618 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு நடைபெற உள்ள மையங்களில் கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தேர்வினை கண்காணிக்கும் வகையில் 82 முதன்மை கண்காணிப்பு அலுவலர்களும், 20 சுற்றுக்குழு அலுவலர்களும், 11 பறக்கும் படை அலுவலர்களும், 164 ஆய்வு அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தேர்வு நிகழ்வுகளை முழுமையாக கண்காணிக்கும் வகையில் 88 வீடியோகிராபர்கள் மூலமாக பதிவு செய்யப்படவுள்ளன. தேர்வு நாளன்று தடையில்லா மின்சாரம் வழங்குவது, தேர்வு மையங்களுக்கு அருகில் தேர்வு நாளன்று வழக்கமான பஸ் நிறுத்தம் இல்லாவிடினும் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேர்வாளர்களுக்கு வசதியாக பஸ் நிறுத்தி செல்லவும், தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களை இயக்குவதற்கும், இவற்றை கண்காணித்திடவும் போக்குவரத்துத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு எடுத்து சென்று கருவூலத்தில் பத்திரமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் ஜெயபிரபாகரன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments