கீரனூரில் ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு வந்தபோது பரிதாபம்: அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பேர் பலி பள்ளி மாணவன் படுகாயம்




கீரனூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு திரும்பி வந்தபோது அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் இறந்தனர். பள்ளி மாணவர் படுகாயமடைந்தார்.

2 பேர் பலி

திருச்சி மாவட்டம் மாத்தூர் அருகே சேப்பலாம்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மகன் கார்த்தி (16). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது உறவினர் பாலமுருகன் (21). எலக்ட்ரீசியன். இவர்கள் 3 பேரும் நேற்று புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை குமார் ஓட்டினார். களமாவூர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது, எதிரே திருச்சியில் இருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் குமார் மற்றும் பாலமுருகன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கார்த்தி படுகாயமடைந்தார்.

போலீசார் விசாரணை

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து படுகாயமடைந்த கார்த்தியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடைேய இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குமார், பாலமுருகன் ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments