ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை அரசு பஸ்களில் மாணவர்கள், பழைய பயண அட்டையை பயன்படுத்தலாம் அமைச்சர் சிவசங்கர் பேட்டி




    சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி வருமாறு:-

அரசு பஸ்களில் பயணிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க டெண்டர் கோரப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பஸ்சில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதுவரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பஸ்களில் அவர்கள் பயணம் மேற்கொள்ளலாம்.

பள்ளி வாகனங்களில் முன்புறம், பின்புறம் கேமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறந்தவுடன் இதுபற்றி முழுமையாக கண்காணிக்கப்படுவதோடு, மண்டல போக்குவரத்து அதிகாரி மூலம் சோதனை மேற்கொள்ளப்படும்.

பஸ் பணிமனைகளில் பணிகளில் இருக்கும் பணியாளர்கள் தொடர் விடுப்பில் இருப்பதால்தான் பேருந்து இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்ய தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்விற்கு பின் பணியாளர்கள் மீண்டும் பணிக்கு வர தொடங்கி உள்ளனர். வரும் நாட்களில் இதை முழுமையாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

பஸ் பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்தாண்டு இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தபின், ஜிபே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகளை பயன்படுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments