18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி.. ஜூலை 15 முதல் அமல் என மத்திய அரசு அறிவிப்பு




75 வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் ஜூலை 15 முதல் 75 நாட்கள் வரை 18 முதல் 59 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் கூறியுள்ளார்.

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது.

இதனால் தடுப்பூசி பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதோடு மாநில அரசும், மத்திய அரசும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் 
 
இதன் ஒருபகுதியாக தான் மக்கள் அனைவரும் முறையாக கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியாவில் 75 நாட்கள் வரை 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:

ஜூலை 15 முதல் அமல்
இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக 75 நாட்கள் அனைத்து வயதினருக்கும் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 15ம் தேதி முதல் செப்டம்பர் 28 வரை மொத்தம் 75 நாட்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயது வரையிலானவர்கள் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள முடியும்'' என்றார்.

இளம்-நடுத்தர வயதினருக்கு பயன்
இந்தியாவில் 60 வயது நிரம்பிய முதியவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு அரசு மருத்துவமனை, முகாம்களில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாறாக 18 வயது முதல் 59 வயது நிரம்பியவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் தான் 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்கள் வரை பூஸ்டர் தடுப்பூசி இலவசம் என் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இளம் மற்றும் நடுத்தர வயதினர் அதிகம் பயன்பெற உள்ளனர்.

கால இடைவெளி குறைப்பு

முன்னதாக, கடந்த வாரம் மத்திய சுகாதார அமைச்சகம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இடையேயா இடைவெளியை 9 மாதத்தில் இருந்து ஆறு மாதமாக குறைத்தது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் (என்டிஜிஐ) பரிந்துரையின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments