புதுக்கோட்டையில் வட்டார மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.11¼ லட்சம் மோசடி.. சுகாதாரத்துறை பெண் ஊழியர் கைது!



புதுக்கோட்டையில் வட்டார மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.11¼ லட்சம் மோசடி செய்த சுகாதாரத்துறை பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை அருகே நச்சாந்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருபவர் சுகன்யா (வயது 30). இவர் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் பணியாற்றும் செவிலியர்கள், உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது வழக்கம். மேலும் சிறப்பு முகாம் நடத்தினால் அதற்கு பணம் வழங்குவது உள்ளிட்ட பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், நச்சாந்துப்பட்டி வட்டார மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருபவர் மனோஜ். இவர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார்.

அதில், தனது கையெழுத்தை போலியாக பயன்படுத்தி காசோலை மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குரிய வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சத்து 31 ஆயிரத்து 909-ஐ மோசடி செய்துவிட்டதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோசடியில் ஈடுபட்ட சுகன்யாவை கைது செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.

சுகன்யா மோசடியில் ஈடுபட்டது எப்படி என்பது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘காசோலையில் மருத்துவ அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தி ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என அவ்வப்போது கடந்த சில மாதங்களாக பணம் எடுத்து வந்துள்ளார். மேலும் தனது வங்கி கணக்கிற்கு ரூ.1 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தணிக்கை நடைபெற்ற போது மேற்கண்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் புகார் தெரிவித்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்’’ என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments