10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை! புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு!!



10-ம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அந்த மாணவி செங்கல் சூளைக்கு வேலைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. இந்தநிலையில் பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் குழந்தைகள் நலக்குழுவினர் அவருடைய வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் விராலிமலையை சேர்ந்த கூலி தொழிலாளி கண்ணன் (வயது 30) என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளது தெரியவந்தது. மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்று செங்கல் சூளைக்கு அருகே உள்ள கொட்டகையில் வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் கண்ணனை கடந்த 2021-ம் ஆண்டு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று அதிரடி தீர்ப்பு கூறினார்.

இதில் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், மாணவியை கடத்திய குற்றத்திற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments