ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் நடந்த கொடூரம் திருவாரூரை சேர்ந்தவர், குவைத்தில் சுட்டுக்கொலை




காய்கறி வியாபாரம் கைகொடுக்கவில்லைகுடும்பத்தை காப்பாற்ற ரூ.1½ லட்சம் கடன் வாங்கி வெளிநாடு சென்றார்:திருவாரூரை சேர்ந்தவர், குவைத்தில் சுட்டுக்கொலை ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் நடந்த கொடூரம்


காய்கறி வியாபாரம் கைகொடுக்காததால், குடும்பத்தை காப்பாற்ற ரூ.1½ லட்சம் கடன் வாங்கி குவைத் நாட்டுக்கு சென்ற திருவாரூரை சேர்ந்தவர் அங்கு சுட்டுக்கொல்லப்பட்டார். ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் இந்த கொடூர சம்பவம் நடந்து உள்ளது.

இதுகுறித்த விவரம் வருமாறு:-

காய்கறி வியாபாரம்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள லெட்சுமாங்குடி- கொரடாச்சேரி சாலை மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 40). இவருக்கு திருமணமாகி வித்யா(32) என்ற மனைவியும், நித்தீஷ்குமார்(16), ரிஷிகுமார்(8) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

முத்துக்குமரன் லெட்சுமாங்குடி கடைவீதியில் காய்கறி கடை நடத்தி வந்தார். இந்த காய்கறி வியாபாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. இதனால் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தனது மகன்களை படிக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

வெளிநாடு செல்ல முடிவு

இதனால் தனது குடும்பத்தை காப்பாற்ற என்ன வழி என்று அவர் தீவிரமாக யோசித்தார். அப்போது அவரது மூளையில் உதித்தது வெளிநாடு வேலைக்கு சென்று சம்பாதிப்பது என்பது. இதனையடுத்து அவர் வெளிநாடு செல்ல முடிவெடுத்தார்.

தனது இந்த முடிவை மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் வேறு வழியில்லாததால் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்தனர்.

குவைத்துக்கு சென்றார்

அதன்படி ஒருவரிடம் இருந்து ரூ.1½ லட்சம் கடனாக வாங்கி கட்டி விட்டு ஐதராபாத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். குவைத்துக்கு செல்லும் முன்பு கிளினிக் வேலை அல்லது சேல்ஸ்மேன் வேலை வாங்கித்தர வேண்டும் என்று தன்னை குவைத் நாட்டுக்கு அனுப்பி வைத்த நிறுவனத்தினரிடம் முத்துக்குமரன் கூறியுள்ளார்.

அதற்கு அவரை குவைத்துக்கு அனுப்பி வைத்த ஏஜெண்டும் சம்மதித்துள்ளார். ஆனால் குவைத்துக்கு சென்ற முத்துக்குமரனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவர் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை.

ஒட்டகம் மேய்க்க...

மாறாக அந்த பகுதியில் உள்ள பணக்காரர் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பி வைத்து பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுக்கப்பட்டது. இதனால் முத்துக்குமரன் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளானார். தான் எதிர்பார்த்த வேலை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் ஒட்டகம் மேய்க்க கூறுகிறார்களே என்று மனம் உடைந்து போனார்.

உடனடியாக தனது மனைவி வித்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு குவைத்தில் நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை. பாலைவனத்தில் என்னை ஒட்டகம் மேய்க்க வைத்து விட்டார்கள். தங்கும் இடத்தில் மின் வசதி கூட இல்லை என்று கூறி கதறி அழுதுள்ளார். தனது கணவர் கூறிய செய்தியை கேட்டு வித்யாவும், அவரது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்.

அடி-உதை, கொலை மிரட்டல்

இந்த நிலையில் முத்துக்குமரன் குவைத்தில் உள்ள தனது முதலாளியிடம், ஒட்டகம் மேய்க்கும் வேலை செய்ய தனக்கு கஷ்டமாக உள்ளதாகவும், தான் தனது சொந்த ஊருக்கு செல்ல விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முதலாளி, முத்துக்குமரனை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து முத்துக்குமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார்.

சுட்டுக்கொலை

இந்த தகவலை அறிந்த அந்த முதலாளி, ஜாக்கூர் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக்கொண்டு இருந்த முத்துக்குமரனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. குவைத்தில் இருந்து வெளியாகும் ‘ஜமன் மேட் நியூஸ் பத்திரிகை, 24 வயது குவைத் பிரமுகர், 30 வயது மதிக்கத்தக்க இந்திய தொழிலாளியை சுட்டுக் கொன்றார்’ என்ற செய்தியை முதலில் வெளியிட்டது.

குவைத் விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தியபோது சுட்டுக்கொல்லப்பட்டது தமிழகத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எங்கள் குடும்பத்தின் ஆணிவேரை நாங்கள் இழந்து விட்டோம். எங்களை காப்பாற்ற சென்றவரை இனி எப்போது பார்க்க போகிறோம் என்று முத்துக்குமரனின் மனைவி கதறி அழுதார்.

குவைத் நாட்டுக்கு வேலைக்கு சென்ற முத்துக்குமரன் ஒட்டகம் மேய்க்க மறுத்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மனைவி வித்யா கண்ணீர் மல்க கூறியதாவது:-

கடைசியாக 5-ந் தேதி பேசினார்

குடும்ப கஷ்டம் காரணமாகத்தான் எனது கணவர் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். இதற்கு முன்பு அவர் வெளிநாடு சென்றதில்லை. முதல் முறையாக குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்றார். ஆனால், அவரிடம் சொன்ன வேலை கொடுக்கப்படவில்லை. அங்கு சென்றதும் அவரை மிரட்டி ஒட்டகம் மேய்க்கும் வேலை கொடுத்துள்ளார்கள். என்னிடம் கடந்த 5-ந் தேதி கடைசியாக போனில் பேசினார். அப்போது நான் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்க்கிறேன். மிகவும் கஷ்டமாக உள்ளதாக என்னிடம் கூறினார். அதற்கு நான் கஷ்டமாக இருந்தால் ஊருக்கு வந்து விடுங்கள் என்று சொன்னேன். அவரும் சரியென்று சொன்னார்.

ஆணிவேரை இழந்து விட்டோம்

7-ந் தேதி அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து விட்டதாக எனக்கு தகவல் வந்தது. அந்த செய்தியை கேட்டு நானும், எனது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தோம்.

எங்கள் குடும்பத்தின் ஆணிவேரை நாங்கள் இழந்து தவித்து வருகிறோம். எங்களை காப்பாற்ற சென்றவரை இனி எப்போது பார்க்க போகிறோம். எனது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு நான் எப்படி கரைசேரப்போகிறேனோ தெரியவில்லை.

விசாரிக்குமாறு கூறினோம்

இதனையடுத்து நாங்கள் குவைத் தூதரகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் எந்த தகவலும் எங்களுக்கு கொடுக்கவில்லை.

இதனையடுத்து உள்ளூரில் உள்ள ஒருவர், குவைத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்குமாறு கூறினோம். அவர் விசாரித்தபோது 7-ந் தேதி அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளார்கள் என்று கூறினார். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவரை இப்படியா சுட்டுக்கொல்வார்கள்? இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments