கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் அதிர்ந்தது தைவான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு




தைவானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் அந்த நாடு அதிர்ந்தது. மேலும் நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து நிலநடுக்கம்

தீவு நாடான தைவானின் தென்கிழக்கு கடலோர பகுதியில் அமைந்துள்ள டைடுங் நகரில் நேற்று முன்தினம் இரவு ரிக்டர் அளவு கோலில் 6.4 புள்ளிகள் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

எனினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதங்கள் எதுவும் ஏற்படாத நிலையில் அடுத்தடுத்து பல முறை நிலஅதிர்வுகள் உணரப்பட்டன. இந்த நிலையில் நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 12.14 மணியளவில் டைடுங் நகரில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. எனினும் பின்னர் அது 6.8 புள்ளிகளாக அறிவிக்கப்பட்டது.

மக்கள் வீதிகளில் தஞ்சம்

மேலும் இந்த நிலநடுக்கம் டைடுங் நகரில் உள்ள சிஸ்ஹேங் என்கிற இடத்தில் பூமிக்கு அடியில் 7 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் ஒட்டு மொத்த தைவானும் அதிர்ந்தது. தலைநகர் தைபே உள்பட நாட்டின் பல நகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின் போது அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தப்படி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

ரெயில் தடம் புரண்டது

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த சிஸ்ஹேங் மற்றும் அதன் அருகில் உள்ள யாலி ஆகிய நகரங்களில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரை மட்டமாகின. இதில் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதேபோல் யாலி நகரில் உள்ள மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் பாலத்தில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அங்கும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இதனிடையே சிஸ்ஹேங் மற்றும் யாலி நகரங்களுக்கு இடையில் உள்ள பூலி என்கிற நகரில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. எனினும் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி எச்சரிக்கை

இதற்கிடையில் இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து தைவானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கத்தின் மைய பகுதியில் இருந்து 300 கி.மீ. சுற்றளவில் உள்ள கடலோர பகுதிகளில் அபாயகரமான சுனாமி அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. எனினும் அங்கு சுனாமி தாக்கியதாக உடனடி தகவல்கள் இல்லை. இதற்கிடையில் அண்டை நாடான ஜப்பானில் தைவானையொட்டியுள்ள தெற்கு தீவுகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments