புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்




புதுக்கோட்டையில் மன்னர் கல்லூரி முதல்வரை கண்டித்து மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர்.

தர்ணா போராட்டம்

புதுக்கோட்டையில் மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி இயங்கி வருகிறது. அரசு தன்னாட்சி பெற்ற கல்லூரியான இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த கோரி கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் சிலர் நேரில் சென்று வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். அப்போது 4 மாணவர்களை கல்லூரி முதல்வர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவர்கள் நேற்று காலை கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். மேலும் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் சங்கத்தினரை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார். மேலும் மாணவர்களிடம் நடந்து கொண்ட விதத்திற்கு அவர் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதி சிறிது நேரம் பரபரப்பானது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments