சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு





சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

14 வயது சிறுமி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் துரை என்கிற அப்பாதுரை (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2021-ம் ஆண்டு உறவினர் ஒருவரது மகளான 14 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அப்பாதுரைக்கு தங்கை முறை ஆவார். சிறுமி அப்போது 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் மகளை காணவில்லை என பெற்றோர் தரப்பில் பொன்னமராவதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பாதுரையை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் அப்பாதுரைக்கு சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்ததற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், சிறுமியை திருமணம் செய்ததற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். மேலும் இதனை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட அப்பாதுரை திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments