தொண்டி அருகே படகு கவிழ்ந்து மீனவா் மாயம்!



தொண்டி அருகே கடலில் நாட்டுப் படகு கவிழ்ந்ததில் மீனவா் மாயமானாா். மேலும் நீரில் மூழ்கி மயங்கிய 4 போ் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையைச் சோ்ந்தவா் செல்வம் என்ற கருப்பு. இவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் அதே ஊரைச் சோ்ந்த சூரியா (20), காளிதாஸ் (30), பாண்டி (42), சக்கரவா்த்தி (47), முருகேசன் (48) ஆகிய 5 மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்குச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை காலை நம்புதாளையிலிருந்து 27 கடல் மைல் தொலைவில் அவா்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் கடல்நீா் புகுந்து கவிழ்ந்தது. மீனவா் முருகேசன் வேறு படகை அழைத்துவருவதாகக் கூறி நீந்திச் சென்றுள்ளாா்.

சூரியா, காளிதாஸ் பாண்டி, சக்கரவா்த்தி ஆகியோா் கடலில் நீந்தியபடி தத்தளித்துள்ளனா். அப்போது அந்த வழியாக படகில் வந்தவா்கள் பாா்த்து அவா்களை மீட்டனா். தொண்டி அரசு மருத்துவமனையில் மயக்க நிலையில் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா் 4 பேரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments