தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு




தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிக காலியிடங்கள்

இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி நிலவரப்படி காலியாக இருக்கும் கிராம உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை பற்றிய தகவலை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க கலெக்டர்கள் அந்த தகவலை அளித்துள்ளனர்.

அந்த காலியிடங்களை நிரப்புவதற்காக அந்த தகவல் தேவைப்பட்டது. 1.10.2019 தேதியில் இருந்து 30.9.2022 வரை தமிழகம் முழுவதும் 2,748 கிராம உதவியாளர் காலியிடங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இது அதிகமாகும்.

உடனடியாக...

இந்த காலிப்பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான (உத்தேசம்) தேதிகளை அரசு கூறியுள்ளது.

அதன்படி தாலுகா அளவில் பத்திரிகைகள் மூலம் 10-ந்தேதி அறிவிப்பாணை வெளியிட வேண்டும். இந்த வேலைக்காக விண்ணப்பம் அளிக்கும் கடைசி தேதி நவம்பர் 7. விண்ணப்பங்களை ஆய்வு செய்து நவம்பர் 14-ந்தேதிக்குள் பரிசீலனை செய்து முடிக்க வேண்டும்.

வாசிப்பு மற்றும் எழுத்து திறன் பரீட்சையை நவம்பர் 30-ந்தேதி நடத்த வேண்டும். நேர்முகத்தேர்வை டிசம்பர் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடத்த வேண்டும். தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை டிசம்பர் 19-ந்தேதி வெளியிட்டு அன்றே பணி ஆணைகளை வழங்க வேண்டும்.

பரீட்சைகள்

எழுத்துத்திறன் பரீட்சையை கண்காணிக்க தாலுகா அளவில் துணை கலெக்டரை கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்க வேண்டும். கிராமத்தை பற்றிய விவரங்கள் அல்லது நில வகைப்பாடுகள் அல்லது கிராம கணக்குகள் அல்லது மாவட்ட கலெக்டர் கூறும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம். வாசிப்பு திறனை அறிந்து கொள்வதற்காக எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்க சொல்லலாம்.

விதிகளை பின்பற்றி...

தாசில்தார்கள் மூலம் தாலுகா அளவில் மேற்கொள்ளப்படும் ஆட்கள் தேர்வு, முறையாக விதிகளை பின்பற்றி நடைபெறுகிறதா? என்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் எந்தெந்த தேதியில் கிராம உதவியாளர் தேர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதையும் அதற்கான விதிகள், வழிகாட்டுதல்களை தாசில்தார்களுக்கு கலெக்டர்கள் சுற்றறிக்கையாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments