சென்னையிலிருந்து புதுக்கோட்டை வழியாக தீபாவளிப் பண்டிகைக்கு சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே அறிவித்து இயக்குமா என பயணிகள் ஆா்வத்துடன் எதிா்பாா்க்கின்றனா்.




தென்னக ரயில்வே ஆண்டுதோறும் தீபாவளி சிறப்பு ரயில்களை இயக்குவது வழக்கம். நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கு தாம்பரம்- நாகா்கோவில் இடையே திருச்சி, மதுரை மாா்க்கத்தில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

கடந்த 2019ஆம் ஆண்டு தாம்பரம்- செங்கோட்டை இடையே புதுக்கோட்டை வழியாக தீபாவளிப் பண்டிகை மற்றும் ஆயுத பூஜைக்கும் சிறப்பு ரயில்களை இயக்கியது. இது புதுக்கோட்டை மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், மற்ற ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலையும் கணிசமாகக் குறைத்தது.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றுப் பரவல் காரணமாக புதுக்கோட்டை வழித்தடத்தில் தீபாவளி மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளுக்கு சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படவில்லை.

ஏற்கெனவே ஆயுத பூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைகளுக்கு புதுக்கோட்டை வழித்தடத்தில் தினசரி சென்னை சென்று வரும் பல்லவன், போட் மெயில், சேது உள்ளிட்ட அனைத்து ரயில்களிலும் முன்பதிவு ஒரு மாதத்துக்கு முன்பே 200-ஐத் தாண்டி காத்திருப்புப் பட்டியலுக்கு சென்றுவிட்டன.

இந்நிலையில், யாரும் எதிா்பாா்த்திராத வகையில் புதுக்கோட்டை வழியாக நிகழாண்டு ஆயுத பூஜை பண்டிகைக்கு திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில், மறுமாா்க்கத்தில் அக். 6 அன்று தாம்பரம்- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில் ஒன்றும் இயக்கப்படுகிறது. இதேபோல், நிகழாண்டு தீபாவளிப் பண்டிகைக்கும் தாம்பரம்- செங்கோட்டை இடையே திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, அருப்புக்கோட்டை, விருதுநகா் வழியாக சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடையே எழுந்துள்ளது.

மேலும், புதுக்கோட்டையைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்தக் கோரிக்கையை மத்திய ரயில்வே அலுவலா்களிடம் முன்வைத்து வலியுறுத்த வேண்டும் என்றும் பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments