ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது?





புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மூலம் கடலில் சென்று மீன்பிடித்து தங்களது குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்படுவதோடு பல லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மீன்களையும் கொள்ளையடித்து செல்கிறார்கள்.

சில சமயங்களில் இலங்கை கடற்படையினர் மீனவர்களை தாக்கி அவர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்று விடுகிறார்கள். இதனால் மீனவ பெண்கள் வாழ்க்கை இருளடைந்து விடுகிறது. மேலும் அவர்களது குடும்பம் கண்ணீரில் மிதக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது என்று அனைத்து மீனவர்களும் எதிர்பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது:-


விசைப்படகுகள் பறிமுதல்

விஜயகுமார்:- ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு விசைப்படகும் ரூ.20 லட்சத்திற்கும் மேலாகும். இந்த விசைப்படகை வைத்து தான் மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளது. கடந்த மாதம் இதே பகுதியை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கை சிறையில் அடைத்துள்ளனர். இதனால் மீனவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இந்த விஷயத்தில் மத்திய- மாநில அரசுகள் உடனே தலையிட்டு அங்குள்ள விசைப்படகுகளையும், சிறையில் உள்ள மீனவர்களையும் உடனே விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைப்பது எப்போது? என அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து உள்ளோம்.

மானிய டீசல்

செல்வகுமார்:- ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இந்த விசைப்படகுகள் அரசு தரும் மானிய டீசலை பெற்றுக்கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்க செல்கின்றன. அரசு ஒரு விசைப்படகுக்கு மாதம் 1,500 லிட்டர் டீசல் மட்டுமே கொடுக்கின்றது. ஆனால் மீனவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் முதல் 4 ஆயிரம் லிட்டர் வரை டீசல் தேவைப்படுகிறது. இதனால் பற்றாக்குறை டீசலை தனியார் பங்குகளில் அதிக விலை கொடுத்து மீனவர்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்திய-மாநில அரசுகள் இப்பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கு மானிய டீசலை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.

சுனாமி பேரலை

ஜெயமணி:- கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளம் அருகே உள்ள கடல் பகுதியில் மணல் திட்டு ஏற்பட்டு அந்த இடம் மேடாக மாறிவிட்டன. இதனால் மீனவர்கள் துறைமுகத்தில் தங்கள் படகுகளை கட்ட முடியாமல் நடுக்கடலிலேயே நிறுத்தி வைக்கின்றனர். மேலும், இந்த மணல் திட்டு காரணமாக பிடித்துவரப்பட்ட மீன்களை மீன்பிடிதளத்தில் நேரடியாக கொண்டு செல்ல முடியாமல் நாட்டுப்படகு மூலம் விசைப்படகு இருக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து மீன்களை ஏற்றி கரைக்கு கொண்டு வரும் அவல நிலை ஏற்படுகிறது. அடிக்கடி தண்ணீர் சற்று உள்வாங்குவதால் மணல்திட்டு மேலே தெரிகிறது. இதனால் கடலுக்குள் எப்படி செல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறோம்.

இது சம்பந்தமாக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மணல் திட்டை அப்புறப்படுத்த முயற்சி எடுத்தோம். ஆனால் அந்த மணல் திட்டை அகற்ற முடியவில்லை. எனவே மீனவர்களின் நலன் கருதி மீன்பிடித் துறைமுகம் அருகே உள்ள மணல் திட்டை தமிழக அரசு அகற்றுவதுடன், மீன்பிடி துறைமுகத்தை ஆழப்படுத்த வேண்டும்.

மீன்களை பதப்படுத்தும் மையம்

கலைச்செல்வன்:- ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியில் 2 பெரிய மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்கு பிடித்து வரப்படும் மீன்கள் பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. விழாக்காலங்களில் மீன்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்படும். அப்போது மீன்களை பதப்படுத்தி வைக்க தனியார் ஐஸ் பிளாண்டுகளை மீனவர்கள் நாடுவார்கள். இதற்கு ஐஸ் கம்பெனிகள் மீனவர்களிடம் சில தொகைகளை வாங்கிக் கொள்வார்கள். இதனால் இப்பகுதியில் அரசு குளிர்சாதன வசதியுடன் மீன்களை பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments