சென்னை பரங்கிமலை ரெயில்நிலையத்தில் ரெயில்முன் தள்ளி மாணவி படுகொலை;





சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் ரெயில்முன் தள்ளி கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படுபாதக செயலை செய்த போலீஸ் அதிகாரியின் மகனை போலீசார் கைது செய்தனர் 

சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெஞ்சை உலுக்கும் இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கல்லூரி மாணவி

சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் (வயது 47). இவரது மனைவி ராமலட்சுமி (43). மாணிக்கம் ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக பணியாற்றி வருகிறார்.

இவர்களது மகள் சத்தியப்பிரியா (20). இவர் தியாகராயநகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தினமும் மதியம் பரங்கிமலை ரெயில்நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மின்சார ரெயில் மூலம் தியாகராயநகர் செல்வது வழக்கம்.

காதல்

சத்தியப்பிரியா வசித்து வரும் போலீஸ் குடியிருப்புக்கு எதிரே உள்ள வீட்டில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் என்பவர் வசித்து வருகிறார்.

இவரது மகன் சதீஷ் (23). டிப்ளமோ படித்துள்ளார். சத்தியப்பிரியா, சதீஷ் ஆகியோரின் வீடு எதிரெதிரே என்பதாலும், இருவரும் போலீஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.


 
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்களது காதல் விவகாரம் இருவரது வீட்டுக்கும் தெரியவந்தது.

பெற்றோர் எதிர்ப்பு

டிப்ளமோ படித்துள்ள சதீஷ், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததை சுட்டிக்காட்டி இவர்களது காதலுக்கு சத்தியப்பிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை புரிந்துகொண்ட சத்தியப்பிரியா, சதீஷை விட்டு விலக தொடங்கினார். இருந்தபோதிலும் தனது காதலில் உறுதியாக இருந்த சதீஷ், சத்தியப்பிரியாவை பின்தொடர்ந்து வந்தார். சத்தியப்பிரியாவின் மனதை மாற்றி தனது காதலை மீண்டும் ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும் என்ற உறுதியோடு அவரிடம் சதீஷ் தொடர்ந்து பேச முயற்சி செய்து வந்தார்.

ரெயில் நிலையத்தில் தகராறு

இருந்தபோதிலும் சதீஷை, சத்தியப்பிரியா கண்டுகொள்ளவில்லை. இந்த நிகழ்வுகள் அனைத்தும் தன்னை உதாசீனப்படுத்துவதாக சதீஷ் கருதினார். இருந்தபோதிலும் அவ்வப்போது நடந்த கசப்பான சம்பவங்களை மறந்து காதலை ஏற்றுக்கொள்ள செய்ய வேண்டும் என்ற ஒரே மனநிலையுடன் சதீஷ், சத்தியப்பிரியாவை சுற்றி சுற்றி வந்துள்ளார்.

வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று மதியம் 1.30 மணிக்கு தனது தோழியுடன் சத்தியப்பிரியா, பரங்கிமலை ரெயில் நிலையம் வந்தார். அவர் ரெயிலுக்காக காந்திருந்தபோது, அங்கு சதீஷ் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது சதீஷ், சத்தியப் பிரியாவிடம் பேச முயன்றார். ஆனால், அவர் பேசுவதை தவிர்த்து வந்தார். அவரிடம் இருந்து விலகி செல்ல முயன்றார். ஆனால், சதீஷ் விடவில்லை. அதற்கு சத்தியப்பிரியா, 'என்னை பின்தொடர வேண்டாம், என்னை விட்டு விடு, எனக்கு உன்னை பிடிக்கவில்லை' என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ், ஏற்கனவே காதலித்த விஷயத்தை சுட்டிக்காட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ரெயில் முன்பு தள்ளினார்

அப்போது இருவருக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், 'தனது காதலை ஏற்காவிட்டால் நீ உயிரோடு இருக்க முடியாது' என்று மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் சத்தியப்பிரியா, தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.

இருவருக்கும் இடையே தகராறு உச்சகட்டத்தில் இருந்த போது, தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயில் நடைமேடை பகுதியில் வந்து கொண்டிருந்தது. சத்தியப்பிரியாவும், அவரது தோழியும் ரெயிலில் ஏறி செல்வதற்காக தயாராக இருந்தனர்.

அப்போது திடீரென சதீஷ், சத்தியப்பிரியாவை ஓடும் ரெயில் முன்பு தள்ளினார். அப்போது ரெயிலின் முன்பகுதியில் மோதியபடி சத்தியபிரியா தண்டவாளத்தில் விழுந்தார். இதனை சற்றும் எதிர்பாராத என்ஜீன் டிரைவர், உடனடியாக ரெயிலை நிறுத்த முயன்றார்.

ரத்த வெள்ளத்தில் பலி

இருந்த போதிலும் ரெயில் சக்கரம் சத்தியப்பிரியா மீது ஏறி இறங்கியது. ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் சத்தியப்பிரியா உயிரிழந்தார்.

சத்தியப்பிரியாவின் தலை துண்டாகி தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம் என அவரது உடல் சிதறி கிடந்தது. யாரும் எதிர்பாராத வகையில் நொடிப்பொழுதில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை பார்த்து ரெயிலுக்காக காத்திருந்தவர்கள், ரெயிலில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சத்தியப்பிரியாவின் உடலை பார்த்து அங்கிருந்தவர்கள் கண்கலங்கினர். இந்த சம்பவத்தை பார்த்த சிலர், தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டு வந்த பணியை விட்டுவிட்டு கண்கலங்கியபடி வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.

சத்தியப்பிரியாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த சதீஷ், கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடினார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த சத்தியப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் சத்தியப்பிரியாவின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன், சப்-இன்ஸ்பெக்டர் குமுதா மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு உமா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ரெயில்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

தப்பி ஓடிய சதீஷை பிடிக்க பரங்கிமலை உதவி போலீஸ் கமிஷனர் அமீர் அகமது, மடிப்பாக்கம் உதவி போலீஸ் கமிஷனர் ரூபன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படை, சிறப்பு போலீசார் தலைமையில் 3 தனிப்படை என 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கைது செய்தனர் 

சதீஷின் செல்போன் மூலம் அவர் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவரை பிடிக்க தனிப்படையினர் களம் இறங்கி உள்ளனர்.

இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments