மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு: 12 கிராம மக்கள் திருப்புனவாசலில் மறியல்





பாம்பாற்றில் செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கூறி 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருப்புனவாசலில் மறியலில் ஈடுபட்டனர்.

மணல் குவாரி

ஆவுடையார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட பறையத்தூர், சோத்திரிவயல், மங்களம், எட்டிச்சேரி, புத்தாம்பூர், கண்ணமங்கலம், திருப்புனவாசல் உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாம்பாற்றின் கரையோர பகுதியில் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஓடும் பாம்பாறானது ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியில் மணல் குவாரி அமைக்கப்பட்டு லாரிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் அரசு அறிவித்துள்ள வரம்பை மீறி மணல் அள்ளப்படுவதாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

சாலை மறியல்

பாம்பாற்றில் அனுமதித்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் வறட்சி அடைந்து வருவதாக கூறி திருப்புனவாசல் பகுதியில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட ஆற்றுப்பகுதியில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் கூறியதாவது:-

ஆவுடையார்கோவில் தாலுகாவுக்குட்பட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஏற்கனவே வறட்சியான பகுதியாகும். இப்பகுதி மக்கள் போதியளவு குடிநீரின்றி தவித்து வருகிறோம். இந்தநிலையில் தற்போது மணல் குவாரியால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மணல் குவாரியை இங்கிருந்து அகற்ற வேண்டும். இல்லையெனில் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments