மின்சாரம் தாக்கி புதுக்கோட்டை மாணவன் பலி: குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவு





புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மகன் ஆண்டோ ஸ்டானிஷ் வினித் (வயது 16). அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த 2015-ம் ஆண்டில் அங்குள்ள ஊராட்சி கட்டிடத்தின் மாடிக்கு சென்றார்.

அப்போது அங்கு தாழ்வாக சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

அவரது இறப்புக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு ஜெயசீலன், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது ஜெயசீலன் இறந்தார். இதனால் வழக்கை ஆண்டோவின் தாயார் சகாயமேரி நடத்தினார். இந்த வழக்கை விசாரித்து நீதிபதி விஜயகுமார் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த விபத்துக்கு உயிரிழந்த மாணவனின் கவனக்குறைவும் உள்ளது. இருப்பினும் உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாக சென்றுள்ளது. அந்த கம்பி 25 ஆண்டு பழமையானது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. அப்படியிருக்கும்போது தாழ்வாக சென்ற அந்த மின் கம்பியை, ஆபத்தை ஏற்படுத்தாத வகையில் உயர்த்தி கொண்டு செல்லவோ, அல்லது வேறு வழித்தடத்தில் கொண்டு செல்லவோ மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உயிரிழந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டு தொகையை 3 மாதத்தில் மின்வாரியம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments