உணவு பொருட்களில் கலப்படமா? பகுப்பாய்வு வாகனம் மூலம் பொதுமக்கள் அறியலாம்




உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் புதுக்கோட்டைக்கு வந்துள்ளது. இந்த வாகனத்தில் உணவு பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்யும் உபகரணங்கள் உள்ளது. சிறிய ஆய்வகம் போல உள்ள இந்த வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காகவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் வருகிற 25-ந் தேதி வரை சுற்றிவர உள்ளது. தங்கள் பகுதிக்கு இந்த வாகனம் வரும் போது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். பால் பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும், மசாலா பொருட்கள் மற்றும் தயாரிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களில் அஜினோ மோட்டோ மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும், உப்பில் அயோடின் பரிசோதனை மேற்கொள்ளவும், எண்ணெய் வகைகளில் வேறு எண்ணெய் கலப்படம் குறித்தும், பருப்பு வகைகளில் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், டீ மற்றும் காபியில் இரும்பு துகள்கள் மற்றும் செயற்கை நிறமிகள் கலப்படம் குறித்தும், குடிதண்ணீரில் நீர் அளவு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே பொதுமக்கள் அனைவரும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்பது குறித்து இவ்வாகனத்தின் மூலம் பரிசோதனை மேற்கொண்டு ஆரோக்கியமான வாழ்வினை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்நிகழ்வில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார், கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் மரு.சம்பத், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனிதா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments