9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை! புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு!!



9-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 26). இவர் உறவினரது மகளான 14 வயதுடைய 9-ம் வகுப்பு மாணவியிடம் செல்போனில் அடிக்கடி பேசி பழகி வந்தார். மேலும் அந்த மாணவியை முத்துப்பாண்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த ஆண்டு (2021) செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி சத்யா தீர்ப்பளித்தார். இதில் முத்துப்பாண்டிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்ட முத்துப்பாண்டியை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments