சாயல்குடி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன மற்றொரு இடத்தில் பெண் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது




சாயல்குடி அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய 2 டால்பின்கள் கடலில் விடப்பட்டன. மற்றொரு இடத்தில் பெண் டால்பின் இறந்து கரை ஒதுங்கியது.

மன்னார்வளைகுடா கடலில் ஓங்கி இன திமிங்கலங்கள், ஆவுலியா எனப்படும் கடல் பசு, டால்பின், பாறாமை, பாலாமை, பனை மீன், வேளா மீன், பால் சுறா, கடல் அட்டைகள், கடல் குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு வகை உயிரினங்கள் உள்ளன. இந்த மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது.

வலையில் சிக்கிய டால்பின்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் கடல் பகுதியில் மீனவர்கள் கரைவலையை பயன்படுத்தி மீன் பிடித்தனர். வலையை இழுத்து கரைக்குகொண்டு வந்தபோது, அந்த வலையில் 2 டால்பின்கள் சிக்கி இருந்தன. இதையடுத்து மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர் மீனவர்கள் வலையில் சிக்கிய டால்பின்களை லாவகமாக மீட்டு, பின்னர் மீண்டும் கடலில் விட்டனர்.

கரையில் இருந்து மீனவர்கள், வனத்துறையினர் சேர்ந்து இழுத்து தண்ணீருக்குள் விட்ட பின்பு, அந்த 2 டால்பின்களும் மெதுவாக நீந்தி ஆழ்கடலை நோக்கி சென்றன.

இறந்து கரை ஒதுங்கியது

இந்த நிலையில் அதே பகுதியில் மற்றொரு இடத்தில் 8 மாத பெண் டால்பின் ஒன்று இறந்து கரை ஒதுங்கி கிடந்தது.

இதுகுறித்து அறிந்ததும் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் ஜெகதீஷ் சுதாகர் உத்தரவுப்படி கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று விசாரித்தனர்.

பெண் டால்பின் உடலை பரிசோதனை செய்து பின்னர், கீழக்கரை வனவர் கனகராஜ் முன்னிலையில் அந்த பகுதியிலேயே புதைக்கப்பட்டது.

இது குறித்து வனச்சரகர் செந்தில்குமார் கூறும்போது, அழிந்து வரும் அரிய வகை இனமான டால்பின் வாலி நோக்கம் மீனவர்கள் கரை வலையில் சிக்கியுள்ளது. மீனவர்கள் உடனே அதனை மீட்டு கடலில் விட்டுள்ளனர் என்றார். கடந்த 20-ந் தேதி சாயல்குடி அருகே நரிப்பையூர் மீனவர்கள் கரை வலையில் சிக்கிய 200 கிலோ எடையுள்ள டால்பினை கடலுக்குள் விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments