உரத்தை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை



        

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள 2 லட்சத்து 15 ஆயிரத்து 831 ஏக்கர் சம்பா நெற் பயிருக்கு விவசாயிகள் மேலுரம் இட்டு வருகின்றனர். இந்த பயிர் சாகுபடிகளுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. மொத்த உர விற்பனையாளர்கள், வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யக்கூடாது. உர விற்பனையாளர்கள் உர உரிமத்தில் அனுமதி பெறாத இடங்களில் உரத்தினை இருப்பு வைப்பதும், உரிமத்தில் அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து உரங்கள், கலப்பு உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவை உரங்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வதும், அதனை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதும் கூடாது. அனுமதி பெறாத நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் மற்றும் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும். உர மூட்டையில் காணப்படும் அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் அல்லாத நுகர்வோர், சாகுபடி இல்லாத விவசாயிகள் ஆகியோருக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது. மேலும் ஒரே நபருக்கு தேவைக்கு அதிகமாக விற்பனை செய்யக்கூடாது. இதுகுறித்து மாதம் வாரியாக உரம் அதிகமாக வாங்கும் முதல் 20 விவசாயிகளிடம் விசாரிக்கப்படுகிறது. விசாரணையின் அடிப்படையில் விற்பனையாளர்களுக்கு விற்பனை தடையாணை வழங்கப்படுகிறது. எனவே தொடர்ந்து வரும் மாதங்களில் மீண்டும் இதுபோன்று, உரம் விற்பனை மேற்கொள்ளப்பட்டால் சில்லரை உர உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் கவிதாராமு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments