இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் உள்பட 14 பேர் சென்னை வந்தடைந்தனர்



இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் 14 பேர் சென்னை வந்தனர்.
 
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் 14 பேர் சென்னை வந்தனர். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்கள் கடந்த மாதம்16-ம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது விசைப் படகில் பழுது ஏற்பட்டது. அப்போது இலங்கை கடற்படை போலீஸார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 14 மீனவர்களைக் கைது செய்தனா்.

பின்னர் அவர்களை இலங்கைக்கு அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தன.

இந்நிலையில், காரைக்கால் மீனவர்கள் 10 பேர், புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேர், நாகை மீனவர்ஒருவர் என மொத்தம் 14 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் 14 மீனவர்களும் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 14 மீனவர்களுக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் மீனவர்களுக்கு பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் மீனவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்றனர்.

முன்னதாக மீனவர்கள் கூறுகையில், “இந்திய எல்லையில் மீன்பிடித்த போது படகு பழுதடைந்து நின்றது. அப்போது, எல்லை தாண்டிவந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். எங்களை விடுவித்தாலும் படகுகளை வைத்துக்கொள்கிறார்கள். படகுகளை மீட்டுத் தந்தால்தான் மீனவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும். இலங்கை அரசு மீனவர்களின் பெரும் மதிப்புள்ள சொத்துகளை முடக்கி வைத்துக் கொள்கிறது. அவற்றை மத்திய, மாநில அரசுகள் மீட்டுத் தர வேண்டும்” என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments