செய்யானம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழை இல்லாததால் பயிர்கள் கருகின! ஏரியை தூர்வார வேண்டும் விவசாயிகள் கோரிக்கை!!



மணமேல்குடி ஒன்றியத்தில் போதிய மழை இல்லாததால் பயிர்கள் கருகின.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் செய்யானம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 350 எக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. மேலும், ஆடு, மாடுகளை வளர்த்து அதன் மூலம் பிழைப்பு நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் இப்பகுதி விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவு செய்து பயிரிட்டனர். ஆனால் போதிய மழை இல்லாததால் விவசாய பயிர்கள் அனைத்தும் கருகின. இதேபோல் கொடிக்குளம், மஞ்சக்குடி, கீழ மஞ்சக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பயிரிடப்பட்ட பயிர்களும் கருகி வருகின்றன. தற்போது விவசாய நிலங்களில் ஆடு, மாடுகள் மேய்கின்றன.
 

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:- 

மணமேல்குடி ஒன்றியத்தில் உள்ள செய்யானம் ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கடந்த ஆண்டு பெய்த மழை நீரை சேமித்து வைக்க முடியாமல் போய்விட்டது. அப்படி சேமித்து இருந்தால் தற்போது மழை இல்லாத காலங்களில் அதனை பயன்படுத்தி விவசாயம் செய்திருப்போம். தற்போது போதிய அளவு மழை பெய்யாததாலும், ஏரியில் தண்ணீர் இல்லாததாலும் பயிர்கள் கருகிவிட்டன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செய்யானம் ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments