சேதுசமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது




சட்டசபை நேற்று காலை 10 மணிக்கு கூடியதும் முதல் நிகழ்வாக கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நேரமில்லா நேரத்தில், சேதுசமுத்திர திட்டம் தொடர்பாக அரசினர் தனித் தீர்மானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கனவுத் திட்டம்

150 ஆண்டு காலக் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றித் தர வேண்டுமென்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் முன்மொழிவதை வரலாற்றுக் கடமை என்று நான் கருதுகிறேன்.

அண்ணாவின் கனவுத் திட்டம் அது. கருணாநிதி நிறைவேற்றப் பாடுபட்ட திட்டம் அது. பாக் நீரினையையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயர் தான் சேதுசமுத்திர திட்டம்.

பயன் கிடைத்திருக்கும்

1972-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் சிலையைத் திறந்து வைக்க இந்திரா காந்தி வந்தபோது, அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி இதனை வலியுறுத்தினார். தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர வேண்டுமானால், சேதுசமுத்திர கால்வாய் திட்டம் மிகமிக அவசியம் என்று வலியுறுத்தி பேசினார். 1998-ம் ஆண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாய், இத்திட்டத்துக்கான திட்டப் பணிகளுக்காக நிதியினை ஒதுக்கினார். பா.ஜ.க. ஆட்சியில்தான் சேதுசமுத்திரத் திட்டத்துக்கான பாதை எது எனத் தீர்மானிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டு மத்திய அளவில் ஆட்சி மாறி, காங்கிரஸ் தலைமையில் தி.மு.க.வை உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்த பிறகு 2,427 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, திட்டப் பணிகள் பாதியளவு முடிந்திருந்தது.

அந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க. சார்பில் இத்திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது என்பதும், இத்திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்து வந்த ஜெயலலிதா திடீரென நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு இத்திட்டத்துக்கு எதிராக வழக்குப் போட்டார் என்பதையும் இம்மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் முட்டுக்கட்டை போடும் செயல் மட்டும் நடக்காமல் இருந்தால் இத்திட்டம் தொடங்கப்பட்டு பத்தாண்டு காலத்தில் ஏராளமான பயன் கிடைத்திருக்கும்.

வாழ்க்கை தரம் உயரும்

கருணாநிதி சுட்டிக் காட்டியதைப் போல, நாட்டினுடைய அன்னிய செலாவணி வருவாய் அதிகரிக்கும்; தமிழ்நாட்டிலே தொழில் வணிகம் பெருகும், கப்பல்களின் பயண தூரம் நேரம் பெருமளவு குறையும், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநில துறைமுகங்களில் சரக்குகளை கையாளும் திறன் அதிகரிக்கும், சிறுசிறு துறைமுகங்களை உருவாக்க முடியும், சேது கால்வாய் திட்டத்தின்கீழ், மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படுவதால், கடல்சார் பொருள் வர்த்தகம் பெருகி, அதன் காரணமாக மீனவர்களுடைய பொருளாதாரம், வாழ்க்கைத் தரம் உயரும்.

மீனவர்களுடைய பாதுகாப்பைக் கணக்கில் கொண்டுதான் இந்தத் திட்டத்தினுடைய காரியங்கள் நடைபெறுகின்றன. மன்னார் வளைகுடாவில் இருந்து பாக் கடல் சென்று வர மீனவர்களுக்கு இந்தக் கால்வாய் வசதி அளிக்கும். இலங்கை உள்ளிட்ட வேறு நாடுகளின் துறைமுகங்களில் இந்திய சரக்குகள் பரிமாற்றம் செய்வது தடுக்கப்படும். நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும். இத்திட்டத்தினால் மிக முக்கியமாக, ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு தொடர்ந்து கிடைக்கும். இவை எல்லாம்தான் அப்போது கருணாநிதி சுட்டிக்காட்டியவை. இவை அனைத்தும் நடந்திருக்கும். நடக்காமல் போனதற்கான அரசியல் காரணங்களை நான் விரிவாகப் பேச விரும்பவில்லை.

வாதாடி செயல்படுத்த வேண்டும்

தமிழ்நாட்டு மக்களின் நீண்டகால கனவு திட்டமான சேதுசமுத்திரத் திட்டம் தொடர்புடைய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. சேதுசமுத்திரத் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்துவோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு சொல்லி இருக்கிறது. ஆனால் ‘ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதை கூறுவது கடினம் என்று மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

இத்தகைய நிலைப்பாட்டுக்கு பா.ஜ.க. அரசு வந்துள்ள நிலையில் சேது சமுத்திரத் திட்டத்தைப் போராடியும் வாதாடியும் செயல்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை இப்பேரவையின் சார்பில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். சபாநாயகர் அனுமதியுடன் சேது சமுத்திரம் திட்டம் தொடர்பான தீர்மானத்தை நான் இப்பொழுது முன்மொழிகிறேன்.

தீர்மானம்

“தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும், இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வலுப்பெறச் செய்வதற்கு மிக இன்றியமையாத திட்டமாக சேது சமுத்திரத் திட்டம் விளங்கி வருகின்றது. 1860-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாயில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டம் இது. அதன்பிறகு 1955-ல் தமிழ்நாட்டின் சிறந்த நிபுணர் ஏ. ராமசாமி முதலியார் குழு, 1963-ல் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 1964-ல் அமைக்கப்பட்ட நாகேந்திரசிங், ஐ.சி.எஸ் தலைமையிலான உயர்நிலைக் குழு ஆகிய பொறியியல் வல்லுனர்களால் பல்வேறு ஆண்டு காலம் ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டதுதான் சேது சமுத்திரத் திட்டமாகும். இதன் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் பணிகளை மேற்கொள்ள திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அனுமதியளித்தார். அப்போதுதான் சேதுசமுத்திரத் திட்டத்தின் வழித்தடம் எது என்பதும் இறுதி செய்யப்பட்டது. பின்னர் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு பொறுப்பேற்றது. தி.மு.க. பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமரான மன்மோகன் சிங் 2004-ம் ஆண்டு 2,427 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் அனுமதிக்கப்பட்டது. கருணாநிதியும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவராக இருந்த சோனியா காந்தியும் முன்னிலை வகிக்க இந்தத் திட்டத்தை மன்மோகன்சிங் 2-7-2005 அன்று தொடங்கி வைத்தார்.

நிறைவேற்றம்

திட்டப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தலைநிமிர வைக்கும் இத்திட்டத்துக்கு, குறிப்பாக தென் மாவட்டங்களைச் செழிக்க வைக்கக்கூடிய இந்தத் திட்டத்துக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய இந்த சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. எந்தக் காரணத்தைக் கூறி முட்டுக்கட்டை போடப்பட்டதோ, அதையே நிராகரிக்கக்கூடிய வகையிலே, தற்போது “ராமேஸ்வரம் கடற்பகுதியில் இருந்தது எந்த மாதிரி கட்டுமானம் என்பதைக் கூறுவது கடினம்” என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.

இப்படி மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு - வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி, இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது.

எனவே, மேலும் தாமதமின்றி இந்த முக்கியமான சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட, மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்றும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என்றும் இந்த மாமன்றம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க., பா.ஜ.க. வரவேற்றது. இதைத்தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments