மகளுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வழங்கல்: தலையில் கரும்புடன் 17 கி.மீ. சைக்கிளில் பயணம் செய்த முதியவர் புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்




புதுக்கோட்டையில், மகளுக்கு பொங்கல் சீர் வரிசை பொருட்கள் வழங்க முதியவர் தலையில் கரும்புடன் 17 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்தார்.

காய்கறி வியாபாரம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடக்கு கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 78). விவசாயமும், காய்கறி வியாபாரமும் செய்து வருகிறார். இவரது மனைவி அமிர்தவல்லி. இவர்களது மகள் சுந்தராம்பாளை, கொத்தக்கோட்டையில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நம்பன்பட்டியை சேர்ந்த பிச்சை பழனி என்பவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.

இவர்களுக்கு திருமணம் முடிந்து சில ஆண்டுகள் குழந்தைகள் இல்லை. பின்னர் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு 8 வயது ஆகின்றது. அன்றைய தினம் முதல் 9 ஆண்டுகளாக பொங்கல் சீர்வரிசை பொருட்களை செல்லத்துரை வழங்கி வருகிறார்.

சைக்கிளில்...

செல்லத்துரை தனது மகளுக்கு ஒரு கட்டு கரும்பு, தேங்காய், பழம், மஞ்சள் குலை, வேட்டி, துண்டு, பொங்கல் பூ, பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களை சைக்கிளில் 17 கிலோ மீட்டர் கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கம். அதேபோல் பொங்கலுக்கு இந்த ஆண்டும் மகளுக்கு சீர் வரிசை பொருட்களை அவர் நேற்று கொண்டு சென்றார். ஒரு கட்டு கரும்பை தலையில் வைத்து கொண்டும், பல்வேறு பொருட்களை சைக்கிளில் வைத்து கொண்டு சென்றார்.

78 வயதிலும் மகளுக்கு சீர்வரிசை

தலையில் சுமந்து கொண்டு சென்ற கரும்பினை கையால் பிடிக்காமல் சைக்கிளை ஓட்டி சென்றார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். பின்னர் அவர் சைக்கிளில் கொண்டு சென்ற சீர் வரிசை பொருட்களை தனது மகளுக்கு கொடுத்தார். அப்போது அவரை அவரது மகள், மருமகன், பேரக்குழந்தைகளும் வரவேற்றனர். 78 வயதிலும் செல்லத்துரை ஆண்டு தோறும் அவரது மகளுக்கு சைக்கிளில் சென்று சீர்வரிசை பொருட்களை கொடுத்து வருவதை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வியப்புடன் பார்த்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments