குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் தமிழக அரசு அறிவிப்பு




குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டிய கிராம சபை கூட்டங்களில் என்னென்ன அம்சங்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

நிதி செலவினம்

வரும் 26-ந் தேதி குடியரசு தினத்தன்று கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இதில் ஒவ்வொரு கிராம சபையிலும் என்னென்ன அம்சங்கள் பற்றி விவாதிக்க வேண்டும் என்பது பற்றிய அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, கிராமசபைக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் 1.4.2022 முதல் 31.12.2022 முடிய கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொண்ட செலவினம் பற்றிய அறிக்கை மற்றும் இதர விவரங்களை கிராம சபையில் படித்து காண்பித்து ஒப்புதல் பெறவேண்டும்.

2022-23-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணிகளின் பெயர், அதன் தற்போதைய நிலை பட்டியலிடப்பட வேண்டும். கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டுக்கான தணிக்கை அறிக்கைக்கு கிராமசபையின் பார்வையில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.

கொசு ஒழிப்பு

ஏடிஸ் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும். அனைத்து குக்கிராமங்களிலும் துப்புரவு பணியை முழுமையாக மேற்கொள்ளுதல், அனைத்து அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல்,

சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, தரை மட்ட நீர்த்தேக்கத் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்தல், தகுந்த அளவு குளோரின் கலந்து குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல் ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சாத்தியமான பணிகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஊரக நூலகப் பணி உள்ளிட்ட பணிகளின் முன்னேற்ற விவரத்தை தகவலுக்காக வைக்க வேண்டும்.

சுகாதாரம்

தனி நபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புற தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமையாக தடைசெய்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்குதல்;

பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருப்பதை உறுதி செய்தல்; அனைத்து வீடுகளிலும் திடக்கழிவுகள் தரம் பிரிப்பதை உறுதி செய்தல்; திடக்கழிவுகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வழிமுறையை மேம்படுத்துதல் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

ஆவாஸ் பிளஸ் பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டிற்கு 2 லட்சத்து 89 ஆயிரத்து 887 வீடுகளை மத்திய அரசு ஒதுக்கிய நிலையில், அதை பயனாளி வாரியாக சரிபார்க்க வேண்டும்.

நிலமற்ற பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் வகையில் கிராம ஊராட்சியில் உள்ள ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து பிரதம மந்திரி குடியிருப்பு திட்ட பயனாளிகளுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக விவாதிக்க வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமையான விவரத்தை கிராம சபையில் விரிவாக எடுத்துரைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் ஏற்கனவே உள்ள கட்டுமான வசதிகளை கருத்தில்கொண்டு 2023-24-ம் நிதியாண்டிற்கு தேவையான பணிகள், வசதிகள் ஆகியவற்றைத் தொகுத்து கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல் வேண்டும். பெண்களை முன்னேற்றும் மூவலூர் ராமாமிர்தம் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments