கடலோர காவல்படையினரை பார்த்ததும் படகில் கடத்தி வந்த தங்கக்கட்டிகள் கடலில் வீசப்பட்டதா? தீவிர தேடுதல் வேட்டை; 3 பேரிடம் விசாரணை




ராமநாதபுரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகளை படகில் கடத்தி வரும்போது, கடலோர காவல் படையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் சுமார் 15 கிலோ தங்கத்தை கடலில் வீசியதும், கடலோர காவல் படையினர் அதை கடலில் தேடி கண்டுபிடித்து கைப்பற்றியதும் மிகவும் பரபரப்பு நிகழ்வாக பேசப்பட்டது.

அதே போன்றதொரு சம்பவம் மீண்டும் தற்போது நடைபெற்று இருக்கலாம் என கடலோர காவல் படையினர் கூறுகிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தனுஷ்கோடி கடல் பகுதி வழியாக மண்டபத்துக்கு படகில் தங்கக்கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதை தொடர்ந்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் மற்றும் மண்டபம் இந்திய கடலோர காவல் படையினர் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு ரோந்து கப்பலில் விரைந்து சென்றனர்.

இந்திய கடலோர காவல் படை கப்பலை கண்டதும், படகு ஒன்றில் இருந்தவர்கள், திடீரென சில பொருட்களை கடலில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து கடலோர காவல் படையினர் விரைந்து சென்று அந்த படகை மடக்கி பிடித்தனர். அதில் இருந்த 3 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அவர்கள் இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்த பொருளைத்தான் கடலில் வீசியது தெரியவந்தது. அவை தங்கக்கட்டிகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து இந்திய கடலோர காவல் படையின் ஸ்க்யூபா டைவிங் (கடல் மூழ்கு நீச்சல்) பயிற்சி பெற்ற வீரர்கள் மூலம் கடலில் வீசப்பட்ட அந்த பொருட்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அந்த பொருட்கள் கைப்பற்றிய பின்னரே அவை தங்கக்கட்டிகளா? அல்லது வேறு ஏதேனும் பொருட்களா? என்பது குறித்து தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பிடிபட்ட 3 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments