கரூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் நீரில் மூழ்கி பலி பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது





புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, பிலிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

விளையாட்டு போட்டி

நேற்று காலை இந்த பள்ளியில் 6, 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மகாலட்சுமி, ஆனந்தி, திவ்யதர்ஷினி, ரேணுகா, ேசாபனா, மற்றொரு ரேணுகா, மற்றொரு திவ்யதர்ஷினி, ஜனனி, கீர்த்தனா, ஏரெப்தா தங்க செமி, தீபிகா, தமிழரசி (வயது 13), சோபியா(12), இனியா(11), லாவண்யா(11) ஆகிய 15 மாணவிகள், ஆசிரியர்கள் திலகவதி, செபா சகேயுன் ஆகியோருடன் ஒரு வேனில் தொட்டியம் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் பங்கேற்க புறப்பட்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அதன்பிறகு அவர்கள் வேனில் பிலிப்பட்டிக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது வரும் வழியில் மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டனர்.

காவிரி ஆற்றில் மூழ்கினர்

பிறகு அங்கிருந்த காவிரி ஆற்றில் 15 மாணவிகளும் இறங்கி சந்தோஷமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு மாணவிகள் தமிழரசி, சோபியா, இனியா, லாவண்யா ஆகிய 4 பேரும் சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கினர். இதைக்கண்ட சக மாணவிகள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கத்தி கூச்சல் போட்டனர்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தண்ணீரில் குதித்து மாணவிகளை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் 4 மாணவிகளும் நீரில் மூழ்கினர். இதையடுத்து மீதமுள்ள 11 மாணவிகளையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டனர். இதுகுறித்து கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

4 மாணவிகள் பிணமாக மீட்பு

தகவலின்பேரில் கரூர் மற்றும் முசிறி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி 4 மாணவிகளையும் தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 4 மாணவிகளும் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மற்றும் மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர்.

அப்போது இறந்த மாணவிகளின் உடல்களை பார்த்து சக மாணவிகள் கதறி அழுதனர். இதையடுத்து 4 மாணவிகளின் உடல்களையும் மாயனூர் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

இதற்கிடையே 4 மாணவிகள் பலியான சம்பவத்தில் பிலிப்பட்டி பள்ளியின் தலைமை ஆசிரியை பொட்டுமணி அஜாக்கிரதையாக இருந்ததற்காகவும், மாணவிகளை விளையாட்டிற்கு அழைத்து சென்ற பொறுப்பாசிரியர்கள் செபா சகேயுன், ஆசிரியை திலகவதி ஆகியோர் கவனக்குறைவாக செயல்பட்டதாகவும் என 3 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் உத்தரவிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

4 மாணவிகள் பலியான சம்பவத்தால் பிலிப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியது. பள்ளியை பெற்றோர்கள், உறவினர்கள் முற்றுகையிட்டு ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சோகத்தில் மூழ்கியது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பிலிப்பட்டி கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகியோர் கரூர் மாவட்டம் மாயனூரில் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த மாணவிகள் 4 பேரின் சொந்த ஊர் பிலிப்பட்டி கிராமம் ஆகும்.

இந்த நிலையில் விளையாட்டு போட்டியில் பங்கேற்க சென்ற மாணவிகளில் 4 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் குறித்து நேற்று மதியத்திற்கு மேல் பிலிப்பட்டி பள்ளிக்கும், அந்த ஊரில் உள்ளவர்களுக்கும் தகவல் வந்தது. இதனை கேள்விப்பட்டு, மாணவிகளின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். ஒரு சிலர் மயக்கம் அடைந்தனர். பலியான மாணவிகளின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாணவிகள் பலியான செய்தி கேட்டு ஊர் பொதுமக்களும் சோகமடைந்தனர். அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியது.

பள்ளியை முற்றுகை

பள்ளியின் முன்பு பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர், பலியான மாணவிகளின் உறவினர்கள் திரண்டனர். மேலும் பள்ளியை முற்றுகையிட்டு அங்கிருந்த ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் நிலவியது. உடனடியாக பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் பள்ளியின் முன்பு குவிக்கப்பட்டனர். தகவல் அறிந்ததும் சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சரவணன், இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பள்ளியின் வெளியே பொதுமக்கள் திரண்டிருந்தனர். மாணவிகளை விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்ற ஆசிரியர்களை இங்கே வர வைக்க வேண்டும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள் கவனக்குறைவாக இருந்தது எப்படி? என ஆவேசத்துடன் கூறிய படி பொதுமக்கள் நின்றனர்.

அழுகுரல்

பள்ளியின் முன்பும், வளாகத்திலும் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதபடி இருந்தனர். இதனால் அந்த பகுதி முழுவதும் அழுகுரலாக கேட்டது. இது அங்கிருந்த அனைவரது மனதையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments