வெளிமாநில தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டும் போலீசாருக்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு




வெளி மாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

தமிழ்நாட்டில் வாழும் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் காணொலிக்காட்சி வாயிலாக, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்துக்கு போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார். இதில் அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சைலேந்திரபாபு பேசியதாவது:-

வெளிமாநில தொழிலாளர் விவரம்

பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் குறித்தும், தொழிலாளர்களின் பெயர், வயது, பாலினம் மற்றும் அவர்களின் சொந்த ஊர் குறித்தும் விவரங்களை போலீசார் சேகரிக்க வேண்டும். பிற மாநில தொழிலாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.

பிற மாநில தொழிலாளர்களுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொடர்பில் இருக்கும் வகையில், அவர்களில் ஒருவரை ஒருமுனை தொடர்பாளராக நியமிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கான உதவி மைய தொலைபேசி எண்ணை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஒரு முனை தொடர்பாளராக நியமிக்கப்பட்ட தொழிலாளர்களை உள்ளடக்கிய ‘வாட்ஸ்அப்’ குழுவை உருவாக்க வேண்டும்.

செல்போன் எண் பகிர்வு

பிற மாநில தொழிலாளர் வசிக்கும் இடங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் இரவு-பகல் ரோந்து மேற்கொள்ள வேண்டும். பிற மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்யும் மற்றும் தங்கி இருக்கும் இடங்களில் பட்டா புத்தகங்கள் வைத்து அவ்வப்போது தணிக்கை செய்யப்பட வேண்டும்.

சிறிய குழுக்களாக அல்லது குடும்பமாக வசிக்கும் பிற மாநில தொழிலாளர்களை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தித்து ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால் அழைக்கும் வகையில் தங்களது செல்போன் எண்ணை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

புகார்களுக்கு உரிய நடவடிக்கை

டாஸ்மாக் மதுபான கடைகள் அருகே பிரச்சினைகள் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இன்ஸ்பெக்டர்கள் பிற மாநில தொழிலாளர்களிடம் போலியாக சித்தரித்து வீடியோக்களை வெளியிடக்கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

வெளிமாநில தொழிலாளர்களிடம் இருந்து புகார்கள் ஏதேனும் போலீஸ் நிலையத்தில் பெறப்பட்டால் அதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற மாநில தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தால் அதன் காரணங்கள் குறித்து விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

போலி வீடியோக்கள் கண்காணிப்பு

உள்ளூர் ஊடக மற்றும் பத்திரிகையாளர்களிடம் வெளிமாநில தொழிலாளர்கள் குறித்து ஏதேனும் செய்தி வெளியிடும் முன்னர் அதன் உண்மைதன்மையை உறுதி செய்து கொண்டு வெளியிடும்படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களில் இந்தியில் பரப்பப்படும் போலி வீடியோக்கள் மற்றும் தகவல்களை தொடர்ந்து கண்காணித்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உடனடியாக செய்தி வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தின்போது நுண்ணறிவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. எஸ்.டேவிட்சன் தேவாசிர்வாதம், சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. கே.சங்கர், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments