எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது 2 விசைப்படகுகள் பறிமுதல்; விரைவில் விடுவிக்க கோரி உறவினர்கள் கண்ணீர்




எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றது. 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீனவர்கள் சிறைபிடிப்பு

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் வேல்மயில். இவருடைய மனைவி விஜயா (வயது20). இவருக்கு சொந்தமான விசைப்படகில் அக்கரைப்பேட்டையை சேர்ந்த ஆனந்தமணி (44), ராஜா (32), வீரையன் மகன் ரவி (48), மதிபாலன் (36), காத்தலிங்கம் (50), ராமமூர்த்தி (38), அன்பு (32), வேல்மயில் (48), சாம்பசிவம் மகன் ரவி (30), கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ரகு (38), தினேஷ் (26), சித்திரவேல் (42) ஆகிய 12 பேர் கடந்த 7-ந் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

நேற்று அதிகாலை இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 12 பேரையும் சிறைபிடித்தனர். மேலும் விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.

விடுவிக்க கோரிக்கை

இதுகுறித்து தகவல் அறிந்த சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் நாகை அக்கரைப்பேட்டை துறைமுகத்துக்கு வந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 12 பேரை மீட்க வேண்டும். பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள விசைப்படகுகளை மீட்க வேண்டும். படகுகள் தான் எங்களுக்கு வாழ்வாதாரம் ஆகும். எனவே மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசு தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட கூடாது. கடலில் மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள்

இதைப்போல நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 172 விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அவரும் அவரது மகன் அசோக் (28) மற்றும் அம்மாசி மகன் கருப்பு (22), செல்வம் மகன் சக்தி (20) ஆகிய 4 மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் சுமார் 30 நாட்டிக்கல் தொலைவில் அனலை தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கையில் உள்ள பருத்தித் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை ஓரிரு நாட்களில் கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.

இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை

இதுகுறித்து கோட்டைப்பட்டினம் விசைப்படகு சங்கத் தலைவர் ஹசன் முஹைதீன் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நான்கு மீனவர்களையும் அவர்களது விசைப்படகையும் உடனே விடுவிக்க இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments