வடகாட்டில் ரேஷன் பொருட்கள் வழங்காததை கண்டித்து சாலை மறியல்




வடகாடு வடக்குப்பட்டியில் புதிதாக ரேஷன் கடை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இதில் வடகாடு, வடக்கிப்பட்டி மற்றும் கல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க நேற்று கடைக்கு சென்றனர். அப்போது உங்களது பெயர் இங்கு இல்லை எனவும், இதனால் ரேஷன் பொருட்களை வழங்க முடியாது என கடை ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் எங்களுக்காக திறக்கப்பட்ட ரேஷன் கடையில் ரேஷன் பொருட்களை வழங்க முடியாது என கூறுவது எந்த வகையில் நியாயம் எனக்கூறி வடகாடு பெரியகடை வீதியில் ஆலங்குடி- ஆவணம் கைகாட்டி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments