சேந்தன்குடியில் சாலை வசதி கேட்டு அடையாள அட்டைகளை முதல்-அமைச்சருக்கு அனுப்பும் போராட்டம்! சாலை அமைக்கும் பணி தொடங்கியதால் கைவிடப்பட்ட போராட்டம்!!



சேந்தன்குடியில் கால்வாய் கரையோரம் சாலை வசதி கேட்டு போராடியவர்கள் அடையாள அட்டைகளை முதல்-அமைச்சருக்கு அனுப்பும் போராட்டம் அறிவித்திருந்த நிலையில் அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை தொடங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

கீரமங்கலம், நகரம், சேந்தன்குடி கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு கொத்தமங்கலம் அம்புலி ஆறு அணைக்கட்டிலிருந்து சேந்தன்குடி வழியாக தண்ணீர் வரும் அன்னதானக்காவேரி கால்வாய் கடந்த ஆண்டு தூர்வாரப்பட்டது.

இதனால் கால்வாயின் தெற்கு கரையில் உள்ள வீடுகள், தோட்டங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை ஏற்பட்டிருந்தது. பலர் சிமெண்டு குழாய்கள் புதைத்து பாலங்கள் அமைத்துள்ளனர். சில இடங்களில் சிமெண்டு குழாய்கள் இல்லாமல் கால்வாயில் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கருப்பையா மகன் செல்வம் (வயது 40) என்பவர் தனது வீட்டிற்கு செல்ல கால்வாய் கரையோரம் சாலை வசதி வேண்டும் என முதல்-அமைச்சர், அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும் மனுக்கள் கொடுத்ததுடன் குடும்பத்துடன் பல்வேறு காத்திருப்பு போராட்டங்களும் செய்துள்ளார்.

ஒரு வருடமாக நடவடிக்கை இல்லாத நிலையில் தனது குடும்பத்தில் உள்ள 6 ஆதார் அட்டைகள், 4 வாக்காளர் அடையாள அட்டைகள், 2 குடும்ப அட்டைகளை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

அடையாள அட்டைகளை கீரமங்கலம் தபால் நிலையத்திலிருந்து அனுப்புவதாக அறிவித்திருந்த நிலையில் நேற்று காலை முதல் தபால் நிலையத்தில் கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெகதீசன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் அடையாள அட்டைகளை அஞ்சலில் அனுப்பும் போராட்டத்தையடுத்து சேந்தன்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் இனியவனை இனிமேல் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்று அஞ்சலகத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.
சாலை வசதி வேண்டி அடையாள அட்டைகளை முதல்-அமைச்சருக்கு அனுப்ப தயாரான போது

மாணவன் இனியவன் குடும்பத்தினரின் போராட்டம் குறித்த தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கவிதாராமு உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார்.

பின்னர் உடனடியாக கால்வாய் கரையோரம் புதிய சாலை அமைப்பதாக உறுதி அளித்ததுடன் பொக்லைன் எந்திரம் மூலம் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

தாசில்தார் செந்தில்நாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரி கோவேந்தன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், கீரமங்கலம் போலீசார் உடனிருந்தனர்.

இதனால் அடையாள அட்டைகளை அஞ்சலில் அனுப்பும் போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு வருட போராட்டம் கோட்டாட்சியர் நடவடிக்கையால் முடிவுக்கு வந்ததாக கூறுகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments