புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் தயார் மருத்துவ உபகரணங்கள் இருப்பு வைப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஒத்திகை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை பயிற்சி நேற்று நடைபெற்றது. இதனை கலெக்டர் கவிதாராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறியதாவது:-

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 14 லட்சத்து 12 ஆயிரத்து 207 முதல் தவணை தடுப்பூசிகளும், 13 லட்சத்து 78 ஆயிரத்து 358 இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் மற்றும் 1,86,461 பூஸ்டர் தடுப்பூசிகளும் என ஆக மொத்தம் 29 லட்சத்து 77 ஆயிரத்து 26 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

படுக்கைகள்

மேலும் கொரோனா தொற்று சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாத 125 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 290 படுக்கைகளும், தீவிர சிகிச்சை பிரிவில் 85 படுக்கைகளும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி இல்லாத 326 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 94 படுக்கைகளும் மற்றும் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி இல்லாத 121 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 149 படுக்கைகளும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 50 படுக்கைகளும் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதி இல்லாத 364 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 26 படுக்கைகளும் என ஆகமொத்தம் 1,630 படுக்கை வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 1,800 பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் 4,664 ஆர்.டி.பி.சி.ஆர். உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ உபகரணங்கள்

நடப்பாண்டில் 23 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் 15 நபர்கள் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 8 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா சிகிச்சை மேற்கொள்வதற்காக 181 மருத்துவர்களும், 285 செவிலியர்களும், 12 மருத்துவ உதவியாளர்களும், வென்டிலேட்டர் பயிற்சி பெற்ற 40 நபர்களும் மற்றும் 110 வென்டிலேட்டர்களும், 23 ஆக்சிமீட்டர் கருவிகளும், 148 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள், 549 ஆக்சிஜன் உருளைகளும், திரவ ஆக்சிஜன் 4 கொள்கலன்களும் (டேங்க்) தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

21,023 எண்ணிக்கையிலான கவச உடைகளும், 6,326 எண்ணிக்கையிலான முககவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழ்நிலையில் அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குனர் (பொறுப்பு) (மருத்துவப்பணிகள்) ராதிகா, மருத்துவ கல்லூரி மருத்துவமனை இருக்கை மருத்துவர் இந்திராணி, துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) ராம்கணேஷ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments