மீமிசல் பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்க பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை!




மீமிசல் பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்க பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் மீமிசல் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரை சுற்றி அதிகமான கிராமங்கள் உள்ளது. மேலும் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, ராமநாதபுரம், தொண்டி மற்றும் மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கு தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூருக்கு சென்று வர சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திசையன்விளை, தேவகோட்டை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக கிளம்புகின்றன. இது தவிர இராமேஸ்வரம், இராமநாதபுரம், ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், களியாக்கவிளை, நாகர்கோவில், திருவனந்தபுரம், வேதாரண்யம், தஞ்சாவூர், கும்பகோணம், வேளாங்கன்னி, நாகப்பட்டினம், நாகூர், சிதம்பரம் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் மீமிசல் வழியாகவே சென்று வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் மீமிசலை கடந்து செல்கின்றன.

இந்நிலையில் மீமிசல் பேருந்து நிலையத்தில் தரை தளம் அமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளதால் பயணிகள் மற்றும் ஓட்டுனர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பயணிகள் பேருந்தில் ஏறும் போதும், இறங்கும் போது பள்ளம் தெரியாததால் பள்ளத்தில் கால் மாட்டி தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போது பள்ளங்களில் நீர் தேங்கி பள்ளம் தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் பேருந்தை விட்டு இறங்கும் போது பயணிகள் தடுமாறி விழுகின்ற சூழல் உள்ளது.

எனவே குழிகளை மழை இல்லாத நேரத்தில் விரைந்து சீரமைக்க வேண்டும் எனவும் புதிதாக பேருந்து நிலையத்தில் தரைத்தளம் அமைக்க பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த பேருந்து நிலையமானது கடந்த 26/09/2020 அன்று அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும், பேருந்து நிலையத்தில் பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.3 லட்சமும் ஆக மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments