புதுக்கோட்டையில் அக்னி நட்சத்திர வெயில் உக்கிரம் அதிகம் பொதுமக்கள் கடும் அவதி




புதுக்கோட்டையில் அக்னி நட்சத்திர வெயிலின் உக்கிரம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

அக்னி நட்சத்திரம்

கோடை காலம் தொடங்கிய முதல் புதுக்கோட்டையில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. இடையில் அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழையினால் வெப்பம் தணிந்திருந்தது. இதற்கிடையில் கோடை காலத்தில் உச்சக்கட்ட வெயில் நிலவும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மழையும் பெய்ததால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என்ற ஒருவித கலக்கத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் அக்னிநட்சத்திரம் வெயில் தனது உக்கிரத்தை காட்டத்தொடங்கிவிட்டது. கடந்த ஒரிரு நாட்களாக வெயில் கடுமையாக சுட்டெரிக்கிறது. சராசரியாக 100 டிகிரி வெயிலின் அளவு பதிவாகி வருகிறது.

பொதுமக்கள் கடும் அவதி

புதுக்கோட்டையில் நேற்றும் பகலில் வெயில் கொளுத்தியது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க சாலையில் நடந்து சென்றவர்கள் பலர் குடையைபிடித்தபடி நடந்து சென்றதை காணமுடிந்தது. அதேநேரத்தில் சில ஆண்கள் தலையில் துண்டை போர்த்தியபடியும், பெண்கள் சேலை முந்தானையாலும், துண்டாலும் தலையை மூடியபடி சென்றதை காணமுடிந்தது. அக்னிநட்சத்திர வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்றாலும் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள்ளேயே முடங்கினர்.

தர்பூசணி பழம்

கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் பலர் தர்பூசணி பழம், நுங்கு, முலாம் பழம் வாங்கி சாப்பிட்டனர். இதேபோல குளிர்ச்சி தரக்கூடிய, தாகத்தை தணிக்க கூடிய இளநீர், பழச்சாறு வகைகள், கரும்பு சாறு உள்ளிட்ட ஜூஸ்வகைகளையும் அருந்தினர். கோடை வெயிலின் தாக்கத்தால் தற்போது இவற்றின் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

சாலையோரங்களில் உள்ள இளநீர் கடைகள், தர்பூசணி பழம், ஜூஸ் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அக்னி நட்சத்திரம் வருகிற 29-ந் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை வெயிலின் கொடுமையை எப்படி தான் சமாளிக்க போகிறோமோ? என பொதுமக்கள் எண்ணி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments